நமக்கு நாமே நெருப்பு!

வயிற்றில் புளியைக் கரைத்துக்கொண்டு இருக்கின்றன ஊடகங்கள்.

பிரபாகரன் சுடப்பட்டு இறந்துவிட்டார் என்றது இலங்கை இராணுவம். சில வீடியோ காட்சிகளையும் காண்பித்தது. இனிப்பு கொடுத்துக் கொண்டாடி மகிழ்ந்தார்கள் சிங்களர்கள்.

ஆனால், சிங்கள அரசு சொல்வது பொய்; பிரபாகரன் சாகவில்லை என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் பழ. நெடுமாறன். பின்னர் வந்த செய்திகளும் அதை உறுதிப்படுத்தின. காட்டப்பட்ட வீடியோ காட்சியில் இருந்தது பிரபாகரன்தானா என்று சந்தேகம் வந்துவிட்டது. போர் நெருக்கடியில் இருக்கும் ஒருவர் இப்படியா மழுமழுவென்று ஷேவ் செய்துகொண்டு இருப்பார் என்பது தொடங்கிப் பல சந்தேகங்கள். சிங்கள அரசு ஏற்கெனவே பலமுறை இப்படியான டகால்டி வேலை செய்திருப்பதால், புலிகளை பலவீனப்படுத்த, மற்றவர்களைத் திசை திருப்ப அது இப்படிப் பொய் புளுகுகிறது என்று ஊடகங்கள் ஊகமாக எழுதுவது உண்மையாகவும் இருக்க நிறையவே வாய்ப்பு இருக்கிறது. பிரபாகரனே பின்னொரு நாள் தன்னை வெளிப்படுத்திக்கொண்டால்தான் குழப்பம் ஒரு முடிவுக்கு வரும். அதுவரை கடவுள் உண்டா, இல்லையா என்கிற பிரச்னை மாதிரிதான் இதுவும். உண்டென்று நம்புகிறவர்களுக்குப் பிரபாகரன் இருப்பார். இல்லையென்று மறுக்கிறவர்களுக்கு இல்லை.

இது ஒரு புறம் இருக்கட்டும்... விடுதலைப் புலிகளை ஒழித்துவிட்டதாகக் குதித்துக் கும்மாளமிட்டுக்கொண்டு இருக்கும் சிங்கள அரசோடு சேர்ந்து இந்திய அரசும் குதித்துக்கொண்டு இருக்கிறது - தலைப்புறம் சீனாவும் பாகிஸ்தானும் கையில் கொள்ளிக்கட்டையை வைத்துக்கொண்டு ரொம்ப நாளாகக் காத்திருக்க, வால்புறமும் சீக்கிரமே தீப்பிடிக்கப்போகிற விபரீதம் புரியாமல்!

அமெரிக்காவுக்குப் போட்டியாக சீனாவும் வல்லரசாக உருவெடுத்துக்கொண்டு வருகிறது. அதற்கு ஆண்டாண்டு காலமாக இந்தியா மீது ஒரு கண். இலங்கையில் தனது ராணுவ முகாம் அமைக்க முடிந்தால் ஒரு ஆட்டம் ஆடிப் பார்க்கலாம் என்று அது ஓநாய் போல் காத்திருக்கிறது. விடுதலைப்புலிகள் இருந்தவரையில் அதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஏனென்றால், சீனாவுக்கு அவர்கள் எதிர்ப்பு. இலங்கையிலும் புத்த தத்துவம்; சீனாவிலும் புத்த தத்துவம். கூட்டிக் கழித்துப் பாருங்கள்... கணக்கு சரியாக வரும்.

புலிகளை ஒழித்துவிட்ட கையோடு சீனாவுக்கு ரத்தினக் கம்பளம் விரித்துவிட்டார் மகிந்த ராஜபக்ஷே. நூறு கோடி அமெரிக்க டாலர் செலவில் இலங்கையில் துறைமுகம் எழுப்புவதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டது சீனா. அடுத்து பாகிஸ்தானும் அங்கே தனது கால்களைப் பதிக்கும். இதெல்லாம் நல்லதுக்கில்லை.

இந்தியாவின் வளர்ச்சி கண்டு பொருமிக்கொண்டு இருக்கும் சீனா இலங்கையில் காலூன்றினால் அது இந்தியாவின் பாதுகாப்புக்குக் கேடு. இது பற்றிக் கவலையோடு கேட்ட பத்திரிகையாளர்களிடம், ''சீனாவுக்கு நாங்கள இடம் கொடுத்தால் இந்தியா பயப்படுவானேன்? இந்தியாவுக்குப் பரந்த மனசு வேண்டும்" என்று நக்கலும் நையாண்டியுமாகப் பதில் சொல்லியிருக்கிறார் ராஜ பக்ஷே.

இலங்கையில் மனித உரிமைகள் நசுக்கப்படுவதாக, அதற்கு அமெரிக்காவும் இங்கிலாந்தும் உதவி செய்ய மறுத்துவிட்டன. 'கவலைப்படாதே! நான் இருக்கிறேன்' என்று கை கொடுக்கிறது சீனா. 'எதிரிக்கு எதிரி நண்பன்; எதிரிக்கு நண்பன் எதிரி' அல்லவா? இந்தச் சின்ன விஷயம்கூடப் புரியாமல் இலங்கைக்கு அந்தக் காலத்தில் இருந்தே உதவிக்கொண்டு இருக்கிறது இந்தியா.

ராஜீவ் கொலை நடந்தது சமீபத்தில். அது புலிகள் செய்த தவறாகவே கூட இருக்கட்டும்; ஆனால், அதற்குப் பல வருடங்கள் முன்பிலிருந்தே, ஏன்... புலிகள் இயக்கம் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தேகூட இலங்கைக்கு உதவி வந்திருக்கிறது இந்தியா.

முல்லைத் தீவில் நடந்த போரில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாகக் குற்றம் சாட்டி, ராஜ பக்ஷே மீது புகார் கூறப்பட்டுள்ளது. இது பற்றி விசாரிக்க ஜெனீவாவில், வரும் செவ்வாய்க்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டப்பட உள்ளது. ஐரோப்பிய நாடுகள் சில இலங்கை அரசுக்கு எதிராக சாட்சி சொல்லத் தயாராகி வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டை எப்படியாவது முறியடித்துவிடவேண்டும் என்று முனைப்பாக உள்ளார் ராஜபக்ஷே. அவருக்குச் சாதகமாகக் குரல் கொடுக்க பொலிவியா, கியூபா, மலேசியா, பக்ரைன், நிகரகுவா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகள் முடிவெடுத்துள்ளன. அவை மட்டுமா? நமது பரம எதிரிகளான பாகிஸ்தானும் சீனாவும் கூடத்தான்!

அவை எப்படி வேண்டுமானாலும் போய்த் தொலையட்டும். கொடுமை என்னவென்றால், இந்தியாவும் இலங்கைக்குச் சாதகமாகத்தான் பேசப் போகிறது.

நம் தலையில் நாமே மண்ணை... இல்லையில்லை, நெருப்பை வைத்துக்கொள்வதற்குச் சமமில்லையா இது?

நல்லாக் கெளப்புறாங்கையா பீதிய..!

*****
எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்பார்க்கத் தவறினால், அந்த எதிர்பாராத நிகழ்வுகள் எதிர்பார்க்கக்கூடிய ஆபத்துகளாக மாறிவிடும் ஆபத்து உண்டு

0 comments: