சிக்கலில் இலங்கை!


சிக்கலில் மாட்டித் தவித்துக்கொண்டு இருக்கிறது இலங்கை.

விடுதலைப் புலிகளை ஒழித்துவிட்டோம் என்று மார் தட்டும் இலங்கை அரசுக்கு இனிமேல்தான் இருக்கிறது தலைவலி.

ஏற்கெனவே விடுதலைப் புலிகளுடன் அது நடத்திய உள்நாட்டு யுத்தத்தால் விசனமுற்ற அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள், இலங்கைக்கு அளித்து வந்த நிதி உதவிகளை நிறுத்திக்கொண்டுவிட்டன. மேலும் அங்கே தொழில் முயற்சிகள் மேற்கொள்வதையும் கை கழுவிவிட்டன. இதனால் இலங்கைக்குப் பணப் பற்றாக்குறை.

இந்நிலையில், பிரபாகரனை ஒழித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ராஜபக்ஷே நடத்திய வெறியாட்டத்தில் சில ஆயிரம் புலிகளும், லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களும் மாண்டது மட்டுமின்றி, இலங்கை ராணுவத்திலும் ஆயிரக்கணக்கில் இறந்து போனார்கள்.

இங்கே நம் பாரத நாட்டில் ஓர் ராணுவ வீரரின் உயிர் இழப்பைக் கூட நம்மால் தாங்க முடிவதில்லை; பதைபதைத்துப் போகிறோம். உயிர்த் தியாகம் செய்த அவருக்கு உரிய கௌரவத்தை இந்திய அரசு உரிய முறையில் நிறைவேற்றுகிறது. ராணுவ அமைச்சர் நேரில் வந்து மரியாதை செய்யவில்லை, ராணுவ உயர் அதிகாரிகள் வரவில்லை என்று அவ்வப்போது சில குறைகள் சொல்லப்பட்டாலும், இங்கே ராணுவ வீரர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவே செய்கிறது. ஒரு சில நடைமுறைகளில் மேலிடம் தவறும்போதெல்லாம் பத்திரிகைகள் அதைச் சாடி எழுதுகின்றன. இவ்வளவு ஏன், மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகளின் தாக்குதல் நடந்தபோது, அதில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த வீரர் ஒருவரின் உடலுக்கு உடனே வந்து மரியாதை செய்யவில்லை என்று, கேரளா முதலமைச்சரை 'வெளியே போ' என்று அந்த வீரரின் தகப்பனார் விரட்டியதையும் நாம் தொலைக்காட்சியில் பார்த்தோமே!

ஆனால், இலங்கையில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அங்கே எந்த மரியாதையும் கிடையாது. சொல்லப்போனால், வீரர் இறந்துவிட்டார் என்கிற தகவலைக்கூட அவரது குடும்பத்துக்குத் தெரிவிப்பது இல்லை.

உண்மையில், அங்கே பக்கா பயிற்சி பெற்ற ராணுவ வீரர் என்று யாரும் இல்லை. இந்திய வீரர்களிடம்தான் அவர்கள் பயிற்சி பெற்றனர். மற்றபடி கல்லூரிகளில் படிக்கும் ஸ்கவுட் மாணவர்களைத்தான் போருக்குத் தயார் செய்து அனுப்பியது இலங்கை அரசு. அவர்களுக்கும் யுத்த முறை என்று பெரிதாக ஒன்றும் தெரியாது. வானில் பறந்து பறந்து குண்டுகளைப் பொழிய மட்டும் தெரியும். அதைத்தான் அவர்கள் செய்தார்கள். புலிகள், அப்பாவிகள், மருத்துவமனைகள், குடியிருப்புப் பகுதிகள் என்றெல்லாம் பார்க்காமல் எல்லா இடங்களின் மேலும் குண்டு மழை பொழிந்தார்கள்.

அவர்களுக்குச் சம்பளம் தருவதற்குக் கூட வக்கற்று இருக்கிறது இலங்கை அரசு. காரணம் வருமானம் இல்லை. அங்கே யாரும் டேக்ஸ் கட்டுவதில்லை. வரி வசூலிக்க வேண்டிய அலுவலகம் இருந்த கட்டடமே போரில் நாசமாகிப் போய்விட்டது. யார் எவ்வளவு கட்டவேண்டும் என்று எந்த ரெக்கார்டுகளும் இல்லை. எப்படிக் கட்டுவார்கள்?

கொழும்பிலிருந்து பாத்திர வியாபாரம், துணி வியாபாரத்திற்காக வரும் தமிழர்களை மடக்கி, 'நீ புலியா?' என்று கேட்கவேண்டியது; அவர்கள் இல்லையென்றாலும் விடாமல், 'சரி, ஒரு அஞ்சு லட்ச ரூபாய் எடு' என்று, தாதா மாமூல் கேட்டு மிரட்டுவது போல் மிரட்ட வேண்டியது; அந்தப் பணத்தைக் கொண்டு அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கவேண்டியது... இப்படியாகப் போய்க்கொண்டிருக்கிறது இலங்கை வாழ்க்கை.

எத்தனை காலத்துக்கு இப்படியே ஓட்ட முடியும்? பார்த்தார் ராஜபக்ஷே, பிரபாகரனை சாகடித்துவிட்டோம் என்று நாடகமாடி, போர் முடிவுக்கு வந்துவிட்டதாகச் சொல்லி, நிறுத்தப்பட்ட நிதி உதவிகளை மீண்டும் பெற முடியுமா என்று தவித்துக்கொண்டு இருக்கிறார்.

சீனா என்னடாவென்றால், நான் அங்கே உனக்குக் கப்பல் தளம் அமைத்துத் தருகிறேன், மருத்துவமனை கட்டித் தருகிறேன் என்று தன் கால்களை அங்கே ஊன்றப் பார்க்கிறதே தவிர, கையில் பைசா தரமாட்டேன் என்கிறது. பாகிஸ்தானுக்கும் இப்போ பண நெருக்கடி.

குயுக்தி மன்னன் ராஜபக்ஷே எப்படிக் காய் நகர்த்தப் போகிறார் என்று பார்க்கலாம்.

*****
உண்மை என்பது ஓங்கி ஒலிக்கும் கண்டாமணியைப் போன்றது. ஆனால் பலசமயம் மனச்சாட்சி என்கிற அதன் நாக்கு இழுத்துக் கட்டப்பட்டே இருக்கிறது.

1 comments:

Anonymous said...

Wow superb post about the Sri lanka's situation
-Rajneesh