25.8.1988 தேதியிட்ட கடிதம்!

ருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய ஒரு கடிதத்தை இன்றுவரை பத்திரமாக வைத்திருந்து, ‘இதையும் பிளாகில் போடுடா’ என்று கொடுத்தார் என் அப்பா. என்னைக் கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லித் தொடர்ந்து வற்புறுத்தி வந்த அவரின் கடிதத்துக்கு நான் எழுதிய பதில் கடிதத்தின் நீளம் ஃபுல்ஸ்கேப் பேப்பரில் 24 பக்கம். அதை அத்தனையும் இங்கே போடுவது சாத்தியமில்லை என்பதால், எடிட் செய்து சுருக்கமாகத் தந்திருக்கிறேன்.

ன்புள்ள அப்பா, அம்மாவுக்கு,

ரவி அநேக நமஸ்காரங்கள். நலம். நலமறிய ஆவல்.

உங்கள் கடிதம் கிடைத்தது. திருமணம் பற்றித் தொடர்ந்து விசாரித்து எழுதுவதால், கீழ்க்கண்டவற்றை எழுதுகிறேன்.

மதம், சம்பிரதாயம், பகுத்தறிவு, மூட நம்பிக்கை எல்லாவற்றையும் ஒதுக்கி வையுங்கள். நேரடியாகத் திருமணம் என்பது என்ன என்கிற விஷயத்துக்கு வருவோம்.

திருமணம் என்பது இரு மனம், இரு உடல் ஒன்று சேர்கிற வைபவம். ஆண் பெண் உறவு முறையை ஒரு ஒழுங்குக்குள் கொண்டு வர, நமது மூதாதையர்கள் சடங்கு, சம்பிரதாயம், அக்னி, ஹோமம் எனப் பலவற்றை ஏற்படுத்தினார்கள்.

எதிரே வரும் பெண் திருமணமானவள் என்று அவள் கழுத்துத் தாலி மூலம் அறிந்து ஆண்கள் ஒதுங்கிச் செல்லவேண்டும் என்பதற்காகப் பெண்ணுக்குத் ‘தாலி’ அணிவித்தார்கள். எதிரே வரும் ஆண் திருமணமானவன் என்று அறிந்து பெண்கள் விலகி நடக்க, ஆணின் காலில் ‘மெட்டி’ அணிவித்தார்கள். ஆண் நிமிர்ந்தே நடப்பவன் என்பதால், அவன் கண்களில் படும்படியாகத் தாலி; பெண் தலை குனிந்தபடியே நடப்பவள் என்பதால், அவள் பார்வையில் படும்படியாக ஆணின் கால் விரலில் மெட்டி. இது சம்பிரதாயம்.

ஆனால், ஆண் என்ன செய்தான்? மெட்டி அணிய அசூயைப்பட்டு, அதையும் பெண்ணிடம் தள்ளிவிட்டான். கால் விரலில் மெட்டி அணியவே அசிங்கப்பட்ட ஆண், ஒரு பெண்ணின் கழுத்தில் துரைத்தனமாய்த் தாலி கட்டிய கையோடு, வந்திருக்கும் கூட்டத்தாரைப் பெருமிதமாய்ப் பார்ப்பது திமிர் இல்லையா? ‘இப்போதிலிருந்து இவள் என் அடிமை’ என்று வந்திருப்பவர்களுக்கு அவன் சொல்லாமல் சொல்லவதல்லாமல் இச் செய்கைக்கு வேறு என்ன அர்த்தம்?

தாலி அணிவிப்பது, ’என்றும் உன்னைக் கைவிடேன்’ என்று உறுதி கொடுப்பதான உயர்ந்த நோக்கத்தின்பாற்பட்டதாம்! தாலியானது பெண்ணின் மார்பில் அசைந்து அசைந்து படும்போதெல்லாம், ‘உன்னைக் காப்பாற்ற உன் கணவன் இருக்கிறான்’ என்று அது அவளுக்குத் தைரியம் சொல்லுமாம். சமீபத்தில் நான் பார்த்த திரைப்படமொன்றில் வந்த முட்டாள்தனமான வசனம் இது.

இன்று எத்தனைப் பெண்கள் வேலைக்குப் போய்த் தங்களையும் காப்பாற்றிக்கொண்டு, தன் கணவனையும் சேர்த்துக் காப்பாற்றி வருகிறார்கள்! அப்படியானால் அவனுக்குத் தைரியம் சொல்ல, அவளல்லவா அவனுக்குத் தாலி கட்டவேண்டும்?

அதெல்லாம் இல்லை. தாலி கட்டுவதென்பது ஆணின் ஆதிக்க வெறி. ‘பெண்ணே, நீ என்னைவிட மட்டம்’ என்று சொல்லி ஆனந்தப்படுகிற மனோவியாதி. பசுவுக்கு மூக்கணாங்கயிறும், பெண்ணுக்குத் தாலியும் ஒன்றேயல்லாமல் வேறென்ன?

பெண்களை ஒருபுறம் தெய்வமென்றும், தாய்க்குலமென்றும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக்கொண்டே, இன்னொருபுறம் அவர்களை ஏமாற்றுவதும், அடிப்பதும், அடிமைப்படுத்துவதுமே ஆண்களின் வேலையாகப் போய்விட்டது. அனுமார் என்று கும்பிட்டுக்கொண்டே, குரங்கை இழுத்துப் போய் தெருவில் வித்தை காட்டிப் பிச்சை எடுக்க வைக்கவில்லையா?

பெண்கள் தெய்வங்கள் இல்லை; மிருகங்களும் இல்லை. மனுஷிகள். அந்த மரியாதையை அவர்களுக்கு ஆண்கள் ஒழுங்காகத் தந்தால் போதும்! தாலி புனிதம் என்று புரட்டுவாதம் பேசிப் பெண்களை ஏமாற்றி, லைசென்ஸ் வில்லை கட்டிய நாய்கள் மாதிரி இனியும் பெண்களைத் தாலியுடன் அலைய விடவேண்டாம். ‘அவர்களே விரும்பி ஏற்கிறார்களே, அப்புறம் உனக்கென்ன?’ என்று கேட்காதீர்கள். நுகத்தடியைத் தூக்கியதும், தானாகவே அதன் கீழ் தன் கழுத்தைக் கொண்டு வருகிற வண்டிமாடுகள் மாதிரிப் பெண்களைப் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோம்.

எனக்குத் தாலி கட்டுவதில் உடன்பாடில்லை. அருவருப்பாக இருக்கிறது. நமது வைதிகச் சடங்குகளில்கூட ‘சப்தபதி’ என்கிற சடங்குதான் உண்டே தவிர, தாலி கட்டும் வழக்கம் இல்லை. அது இடையில், ஆதிக்க மனோபாவம் கொண்ட ஆண்களால் நுழைக்கப்பட்ட சம்பிரதாயம்.

இப்படியெல்லாம் நான் பேசுவதைக் கேட்டுவிட்டு, “ஏதேது... நீ பேசறதைப் பார்த்தா, நீயே ஒரு பெண்ணைப் பார்த்து வெச்சிருப்பே போலிருக்கே?” என்றார் மாமா. இல்லை. அப்படி எதுவும் நானே ஒரு பெண்ணைப் பார்த்து வைக்கவில்லை. அப்படியே இருந்தாலும், அதை உங்களிடமிருந்து மறைக்கிற அளவுக்கு என் மன முதிர்ச்சி குன்றிப் போய்விடவில்லை.

நிதானமாய்ப் பாருங்கள். அவசரம் ஒன்றுமில்லை. அதற்குள் இந்தப் பத்திரிகைத் துறையில் நானும் சற்று அழுத்தமாகக் காலூன்றிக் கொள்கிறேன்.

ஆனால், தாலி கட்டுவதுதான் கல்யாணம் என்றால், அப்படியொரு கல்யாணமே எனக்குத் தேவையில்லை. சட்டபூர்வமாகப் பதிவு செய்துகொண்டு, சிக்கனமாய் வீட்டில் ஒரு பாயசம், பருப்பு. முடிந்தது திருமணம் என்று இருக்கவேண்டும்.

திருமணத்துக்கெனப் பெண் வீட்டார் செலவிட உத்தேசித்திருக்கும் பணத்தைப் பெண் பெயரில் ஃபிக்ஸட் டெபாசிட்டில் போடச் சொல்லுங்கள். நாளைக்கு அவளுக்கு உதவும். எனக்கு ஒரு பைசாவும் வேண்டாம்.

மற்றவை உங்கள் பதில் பார்த்து.

அன்புடன், ரவிபிரகாஷ்.

டைசியில் அந்தச் சோகத்தை ஏன் கேட்கிறீர்கள்? எட்டு வருட காலம் போராடியும் என் நிபந்தனைகளுக்கு எந்தப் பெண் வீட்டாரும் சம்மதிக்காமல், எனக்கும் வயதாகிக்கொண்டே போகிறதே என்பதால், வேறு வழியின்றி, என் 36-வது வயதில் தாலி கட்டித்தான் கல்யாணம் செய்துகொண்டேன். மாங்கல்யம் தந்துனானேனா, மமஜீவன ஹேதுனா...

*****
எல்லோரும் மாற்றத்தை விரும்புகிறார்கள்; தாங்கள் மாறுவதை அல்ல!

2 comments:

butterfly Surya said...

ஒரு கடிதத்தை இத்தனை நாள் பத்திரமாக வைத்திருந்த் அப்பாவிற்கு நமஸ்காரங்கள்.

இப்போதெல்லாம் ஒன்று கவனித்தீர்களா..??

கல்யாண பத்திரிகை தவிர தபாலில் பெரும்பாலும் வேறு கடிதங்களே வருவதில்லை.

அதுவும் இந்த செல்பேசி வந்தது முதல் யார் முகவரியும் யாருக்கும் தெரிவதும் இல்லை.

R.Subramanian@R.S.Mani said...

Almost all the same things happened in my marriage too; lastly i too obliged to my mothers tears; What a joke is recently after my son's marraige when I told my daughter-in law about this and pointed out we might have saved a few lakhs, she has asked me why this waS NOT SUGESTED BEFORE THE MARRIAGE; iF i MIGHT HAVE TALkED ABOUT THIS PrIOR to the MARRIAGE, HER FATHER MIGHT NOT HAVE RETUREND FOR THE FURTHER NEGOTIATIONS, i FEEL;
sUPPAMANI