ஜிலுஜிலு குளுகுளு விகடன்!

ளீர் ஜிலீர் என்று மாறியிருக்கிறது விகடன் அலுவலகம்! விகடன் தாத்தா பத்திரிகை வடிவமைப்பில் மட்டுமல்ல, அலுவலகக் கட்டட அமைப்பிலும் ஜிலுஜிலு குளுகுளுவென மாறிவிட்டார். ஃப்ரெஷ்ஷாக, ஜீன்ஸ் போட்ட இளைஞன் மாதிரி படு இளமையாகிவிட்டார்!

நான் சேர்ந்தபோது இருந்த விகடன் அலுவலகத்துக்கும் இப்போதுள்ள அலுவலகத்துக்கும் பிரமாண்ட மாற்றம். அன்றைக்கு மரப் படிகள், வேலைப்பாடமைந்த வாசற்கால்கள், மர மேஜைகள், மர அலமாரிகள், கிர்ர்ர்ரக் கிர்ர்ர்ரக் என்று சுழலும் தாலூகா ஆபீஸ் ஃபேன்கள், ஒவ்வொரு ஊழியரின் பின்புறச் சுவரிலும் அப்பியிருக்கும் இங்க் கறைகள், வெற்றிலைக் குதப்பலோடு பேசும் சீனியர் ஊழியர்கள், காத்திருப்போருக்கு மர பெஞ்சுகள், காலடியில் ஓடும் பெருச்சாளிகள் என அது ஒரு சுவாரசியம்!

இன்றைக்கு இருப்பது அதே விகடன் அலுவலகமா என்று திக்குமுக்காடச் செய்கிறது. ரொம்ப ஹைடெக்! ஏதோ சாஃப்ட்வேர் அலுவலகம் மாதிரி படு ரிச்சாக மிரட்டுகிறது. இத்தனைக்கும் வெளிவேலைகள் முடியவில்லை. அநேகமாக கட்டட புனருத்தாரண வேலைகள் முடிவடைய இன்னும் மூன்று மாதங்கள் ஆகலாம் என்று நினைக்கிறேன்.

படு பந்தாவான ரிசப்ஷன் ஹால், நவநாகரிகமான நாற்காலிகள், உள்ளே நடந்துபோகும் பாதையெல்லாம் கொட்டுகிற குளிர் மழை, ஹோம் தியேட்டர் வசதி, அற்புதமான லைப்ரரி, சொகுசு நாற்காலிகள், தரையெல்லாம் வழவழக்கும் டைல்ஸ், கண்ணாடிக் கதவுகள், தரையையும் கதவுகளையும் சதா துடைத்துக்கொண்டிருக்கும் பணியாட்கள் என மினி சொர்க்கம் மாதிரி இருக்கிறது ஆபீஸ்.

டாய்லெட் ஒரு நவீனம். ஒன் பாத்ரூமுக்குப் போய் நின்றால் கிளிக் என்று சிவப்பு லைட் கண்ணடிக்கும். முடித்துவிட்டு நகர்ந்தால், தானே தண்ணீர் விட்டுக் கழுவிக் கொள்ளும். தண்ணீர் விட்டு வரக்கூடச் சோம்பேறியாகிவிட்டானே மனிதன்! டாய்லெட் உள்ளும் பக்கெட், பிளாஸ்டிக் கப் எதுவும் கிடையாது. நீளமான பைப்தான். அதன் பிடியை அழுத்தினால், தண்ணீர் பீய்ச்சிடும். தேவைப்பட்ட இடங்களில் வளைத்து வளைத்து உபயோகித்துக் கொள்ள வேண்டியதுதான். நல்லவேளை, பேப்பர் உருளை வைக்கவில்லை!

லேட்டஸ்ட்டாக, அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை கொடுத்திருக்கிறார்கள். சடாரென்று கதவைத் திறந்து அலுவலகத்தின் உள்ளே வெளியார் எவரும் நுழைந்துவிட முடியாது. சுவரில் பொருத்தப்பட்ட குறிப்பிட்ட பெட்டியில் அட்டையைக் காண்பித்தால், அதில் எரியும் சிவப்பு விளக்கு மாறி ஆரஞ்சு ஒளிவிடும். பின்னர், சுட்டு விரலை அதன் மீது வைத்தால், விநாடியில் க்ரீன் சிக்னல் கிடைக்கும். கண்ணாடிக் கதவு லேசாக அதிர்ந்து, திறந்துகொண்டதைத் தெரிவிக்கும். தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தால், பின்பு கதவு தானாக மூடிக்கொண்டு பூட்டிக் கொண்டு விடும். அடுத்து வருபவரிடம் அடையாள அட்டை இருந்தால்தான் உள்ளே நுழைய முடியும்.

உள்ளே வருவதற்கு மட்டுமல்ல, வெளியே போவதற்கும் அப்படியே! சேர்மன், எம்.டி., ஆசிரியர், லைப்ரரி என எந்த அறைக்குச் செல்வதற்கும் இதே விதிப்படித்தான்! ஏதோ ஜேம்ஸ்பாண்ட் படம் மாதிரி இருக்கிறதல்லவா! உண்மைதான்.

அமரர் வாசன் இருந்து பார்க்கவில்லையே இதையெல்லாம் என்றுதான் ஆதங்கமாக இருக்கிறது எனக்கு!
*****
அடுத்தவர்களின் அடிச்சுவட்டிலேயே நடந்துகொண்டு இருந்தால், உங்கள் அடிச்சுவட்டை ஒருபோதும் பதிக்க முடியாது!

2 comments:

butterfly Surya said...

அந்த குளு குளு அலுவலகத்தில் உங்களை சந்திக்க வேண்டும்.

வாய்ப்பு கிடைக்குமா..??

வாழ்த்துகள்.

ungalrasigan.blogspot.com said...

வாங்கய்யா வாங்க! ஆமா, எப்ப வரீங்க?