மைக்கேல் ஜாக்ஸன்

மைக்கேல் ஜாக்ஸன் இறந்துவிட்டார். ஐம்பது வயசு. பத்திரிகைகள் கதறித் தீர்த்துவிட்டன. உலகமெங்கிலும் உள்ள ஜாக்ஸனின் கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளைப் பரப்பிவிட்டதாம் இந்த மரணம். இசையே மரணித்துவிட்டது என்று கூட எழுதுகிறார்கள்.

மைக்கேல் சாதனையாளர்தான். இருக்கட்டும். ஆனால், அவரது மரணம் எப்படி இசையின் மரணமாகும் என்று எனக்குப் புரியவில்லை. அதிர்ச்சி அலைகள் எப்படிப் பரவும் என்றும் தோன்றவில்லை. அது ஓர் இசையரசனின் மரணம். அவ்வளவே!

சாதனையாளர்களும் மனிதர்கள்தான். சாகாவரம் பெற்றவர்கள் அல்ல. அதிலும் மைக்கேல், தானே சொந்தச் செலவில் சூனியம் வைத்துகொண்ட கதையாக, தன் உடம்பைப் படுத்திக்கொண்ட பாட்டுக்கு அந்த மரணம் எதிர்பாராத ஒன்றல்ல. மாதமொன்றுக்கு 25 லட்ச ரூபாய் மாத்திரைகளை முழுங்கிக்கொண்டு இருந்தவர் இத்தனை நாள் வாழ்ந்ததே அதிசயம்தான்!

மிகத் திறமைசாலி. ஆனால், முட்டாள்! தன்னம்பிக்கை அற்றவர். சொர்க்கம், நரகம் இதெல்லாம் உண்டென்று நம்பியவர். சிவப்புத் தோல்காரர்களுக்கும், அழகாக இருப்பவர்களுக்கும்தான் சொர்க்கத்தில் இடம் உண்டென்று நம்பி, கோடிக்கோடியாய்ப் பணம் செலவிட்டுத் தன் நிறத்தையும் முகத்தையும் மாற்றிக்கொண்டேஏஏஏஏஏஏ இருந்தவர். ‘நான் என் நிறத்தை மாற்றிக்கொள்ளவில்லை. அது லூகோடர்மா என்கிற தோலின் நிறமாற்றத்தால் ஏற்பட்ட சிவப்பு’ என்று அவரே ஒரு முறை தன்னிலை விளக்கம் கொடுத்தார். மூக்கை அத்தனை சிதைத்தவர் நிறத்தை மாற்றிக் கொள்ளவும் ஏன் செலவிட்டிருக்க மாட்டார்?

உலகமெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றது ஒன்றும் சாமானிய விஷயமில்லை. எத்தனையோ விருதுகள், கின்னஸ் சாதனைகள்... எல்லாம் சரி! ஆனால், என்னை அவரது நடனம் அப்படியொன்றும் ஈர்க்கவில்லை. அவரின் நிறைய ஆல்பங்கள் பார்த்திருக்கிறேன். கழுத்தை வெட்டித் திருப்புவதும், ஸ்கேட்டிங் வழுக்கல் போல பின்னால் நகர்வதும்தான் நடனம் என்று என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ‘கலக்கப்போவது யாரு?’வில் மதுரை மருது இதைவிட அற்புதமாக உடம்பை ஒடிக்கிறார்; வில்லாய் வளைக்கிறார். யாராவது பாராட்டுகிறோமா? இல்லை. ஒரு கூட்டமே சேர்ந்து பாராட்டினால் அதில் மயங்கி, அல்லது தான் தனித்து நின்றால் தன்னை ரசனையற்றவன் என்று சொல்லிவிடுவார்களோ என்று அஞ்சி, ‘ஆகா! அவரைப் போல உண்டா!’ என்று கோஷ்டி கானம் பாடத்தான் நாம் தயாராகிவிடுகிறோம்.

பரத நாட்டியத்துக்கு ஈடான நடன வகை உலகிலேயே இல்லை. அது ஆழமும், நுணுக்கமும் நிறைந்தது. அத்தனைச் சுலபமாக ஆடிவிட முடியாது. அதையடுத்து ஒடிஸி, கதக் எனப் பல இந்திய நடன வகைகள் அற்புதமானவை! அவற்றோடெல்லாம் ஒப்பிடும்போது மைக்கேலின் நடனமெல்லாம் ஒரு நடனமே இல்லை என்பேன். அது சரி, அவர் எங்கே நடனம் ஆடினார்? ஜிம்னாஸ்டிக்ஸ்தானே செய்தார்!

அதே போல்தான் அவரின் பாடல்களும்! நன்றாக இருக்கின்றன. அதற்காக, உலகத்திலேயே அவரைப் போலப் பாடக்கூடியவர்கள் யாருமே இல்லை; அவர் மறைந்ததால் இசை உலகமே அஸ்தமித்துவிட்டது என்பதெல்லாம் ரொம்ப ஓவர்! ஸ்வேதா ஷெட்டியின் குரலில் உள்ள கம்பீரம் கூட அவர் குரலில் இல்லை. பல வருடங்களுக்கு முன்னெல்லாம் அவரது பாடலை மட்டும் கேட்டுவிட்டு, ஒரு பெண்தான் பாடுகிறாள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

நம்ம ஊர் ஜி.வி. மைக்கேலை வைத்து இந்தியாவில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அந்த நிகழ்ச்சியை மைக்கேல் ரத்து செய்துவிட்டார். இதனால் ஜி.வி-க்கு ஏகப்பட்ட கோடி ரூபாய் நஷ்டம். மைக்கேல் மீது வழக்குப் போடுவதாகக்கூடச் சொல்லிக்கொண்டு இருந்தார். கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோன ஜி.வியின் மரண சாஸனத்தில் மைக்கேலின் கையொப்பமும் இருந்திருக்கிறது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

மைக்கேலின் மரணத்துக்காக அனுதாபப்படலாம்; ஒரு நிமிடம் மௌன அஞ்சலி கூடச் செலுத்தலாம். மற்றபடி, அவரது மரணத்தால் யாரும் அதிர்ச்சியெல்லாம் அடையவேண்டியது இல்லை. இலங்கையில் ஒரு பாவமும் அறியாத அப்பாவித் தமிழர்கள் லட்சக்கணக்கானோரை ரசாயன குண்டுகளைப் போட்டுக் கொன்றார்களே... அதற்கே அதிர்ச்சி அடையாதவர்கள் இயல்பானதொரு மரணத்துக்கு அதிர்வதாகச் சொல்வது அநியாயம்!

உலகில் எத்தனையோ மேதைகள், ஜாம்பவான்கள் பிறக்கிறார்கள்; மறைகிறார்கள். ஒவ்வொரு தடவையும் அதிர்ந்துகொண்டிருந்தால் இந்த உடம்பு என்னத்துக்காவது?

*****
உண்மை என்பது ஓங்கி ஒலிக்கும் கண்டா மணியைப் போன்றது. பல சமயம், மனச்சாட்சி என்கிற அதன் நாக்கு இழுத்துக் கட்டப்பட்டிருக்கிறது!

6 comments:

butterfly Surya said...

தெளிவான கருத்திற்கு நன்றி.

SPIDEY said...

//பரத நாட்டியத்துக்கு ஈடான நடன வகை உலகிலேயே இல்லை//

your opinion echoes with the ones whom u r blaming. bharatha natyam may be the best in indian dances but still there are some dance formats like ballet in this world which is unique in its own way which can be consider the same as u think of bharata natyam

Anonymous said...

பாலே நடனம் பார்க்க பிரமிக்க வைக்கிறது என்பதைத் தவிர, அதுவும் ஏதோ சர்க்கஸ் போலத்தானே இருக்கிறது ஸ்பைடி!அவரவருக்கு அவரவர் குழந்தை உயர்வு என்பது போல இவர் பரதத்தை உயர்த்திச் சொல்கிறார். விடுங்களேன்!
- கே.ஈஸ்வரி

SPIDEY said...

Madam நீங்களும் அதே தொனில பேசுறீங்களே நான் பரதத்த குறைத்தும் பாலேவ உயர்த்தியும் சொல்லல. பார்க்கப் பிரமிக்க வைப்பதால் தாஜ்மகாலையும் தஞ்சை பெரியக் கோவிலையும் சாதரண ஏதோ சீட்டுக்கட்டில் கட்டிய வீட்டிற்கு ஒப்பிட முடியுமா? .

சாதரணமாக ஏதோ சர்க்கஸ்nu சொல்லீடீங்க(( . ஆனா அதுல இருக்குற உழைப்பும் நுணுக்கமும் பரதத்திற்கு சளைத்தது அல்ல!.

சுருக்கமா சொல்லனும்னா "ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு பீலிங்கீ )))) "


சாரோட அந்த ஒரு வரியைத் தவிர மற்ற அனைத்து வரிகளையும் நான் ஆமோதிக்கிறேன், வழி மொழியவும் செய்கிறேன் ))

ungalrasigan.blogspot.com said...

கருத்துக்கள் பதிவிட்ட வண்ணத்துப் பூச்சியார், ஸ்பைடி, ஈஸ்வரி மூவருக்கும் நன்றி! பாலே நடனம் பத்தி அடுத்த பதிவு எழுதணும்னு தோணுது உங்க பின்னூட்டங்களைப் படிச்ச பிறகு!

A-kay said...

Your comments reminded me of amma - I remember amma saying the same things about MJ's dance and music.

That said, I agree with Spidey (mind you, I am a trained Bharatnatyam danced :-P) - but still, I think every dance form has its own beauty and we should not belittle one as we like another. As Spidey mentions, Thanjavur Periya Kovil is an architectural wonder, doesn't mean that Taj Mahal is not or vice versa. Just my 2 cents.