விவஸ்தை கெட்டவர்கள்!

நாட்டில் ரொம்பப் பேருக்கு விவஸ்தை கெட்டுப் போச்சு! ஓரினச் சேர்க்கையாம், உரிமையாம், தீர்ப்பாம், நியாயமாம்... தூ!

அரவாணிகள் தங்கள் உரிமைகளுக்கான வாதங்களை எடுத்து வைத்தார்கள். சினிமாக்களிலும் பொது வாழ்விலும் தாங்கள் எப்படியெல்லாம் கேலிப் பொருளாக்கப்படுகிறோம் என்பதையும், தங்களுக்கென பஸ்களில் ஸீட்டோ, பொது இடங்களில் பிரத்யேகக் கழிப்பறைகளோ இல்லை என்பதையும் சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்கள். அவற்றில் நியாயம் இருக்கிறது. இன்றைக்கு ஒரேயடியாக அவர்களின் நிலை மாறிவிடவில்லை என்றாலும்கூட, சமுதாயத்தில் அவர்களைப் பற்றி முன்பிருந்த மோசமான அபிப்ராயமோ, அந்த அளவு கேலிப் பார்வையோ இப்போது இல்லை. கை ஊனம், கால் ஊனம் என்பது போல பிறப்பிலேயே பால் குறைபாட்டோடு பிறந்தவர்கள் அவர்கள் என்பதை ஜனங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொண்டு வருகிறார்கள். அரவாணிகளாகப் பிறந்தது அவர்களின் குற்றம் இல்லை. இயற்கை செய்த குற்றம். எனவே, அவர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும், சமுதாயம் அவர்களைப் புறக்கணிக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது நியாயமே!

ஆனால், இன்றைக்கு ஓரினச் சேர்க்கையாளர்களும் அப்படியானதொரு கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள். இயற்கைக்கு மாறான தங்களின் வக்கிர உணர்வை நியாயப்படுத்தி வருகிறார்கள். வாதம் செய்வது என்றால் எந்தக் கொலை, கொள்ளை, கற்பழிப்புகளையும்கூட நியாயப்படுத்திவிட முடியும்.

டாக்டர் ராதாகிருஷ்ணன்கூட ஓரினச் சேர்க்கையாளர்தான் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு கேள்விப்பட்டிருக்கிறேன். எம்.ஆர்.ராதா தன்னை ஓரினச் சேர்க்கையில் நாட்டமுள்ளவர் என்று வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டார். இன்னும் பல பெரிய புள்ளிகளும் ஓரினச் சேர்க்கையில் நாட்டமுள்ளவர்களாக இருக்கலாம். ஆனால், அவை எதுவும் பரவலான சமூகக் கவனத்தைப் பெறவில்லை. அப்படியே அவற்றை நாம் உண்மை என்றே ஒப்புக்கொள்வதாக இருந்தாலும், அதை அவர்களின் பலவீனமாகத்தான் பார்க்கிறோமே தவிர, சிறப்பம்சமாகப் பார்க்கவில்லை. காமராஜருக்குப் புகை பிடிக்கும் வழக்கம் இருந்தபோதிலும், அதைப் பலர் அறிய அவர் வெளிப்படுத்திக்கொண்டது இல்லை. காரணம், அவர் உண்மையான பெருந்தலைவர்!

‘ரகசியமாகச் செய்தால் சரி, வெளிப்படையாகச் செய்தால் தப்பா?’ என்று குதர்க்க வாதம் எழுப்பிப் பயனில்லை. ரகசியமாகச் செய்வதால் ஒரு தப்பு சரியாகிவிடாது; ஆனால், அதை வெளிப்படையாகச் செய்யும்போது, அதுவும் ஒரு பெரிய புள்ளி செய்யும்போது அது பலருக்கும் முன்னுதாரணம் ஆகிவிடுகிறது. ‘அவரே செய்திருக்கிறார்; நாம் செய்தால் என்ன?’ என்ற தடித்தனம் உடம்பில் ஏறிவிடுகிறது. பெரியவர்களிடமுள்ள நல்ல குணங்களையும், சாதனைகளையும் விட்டுவிட்டு, அவர்களிடமுள்ள தீய பழக்கங்களை மட்டும் பிடித்துக்கொள்வதுதானே நம் வழக்கம்? கண்ணதாசனே போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர் என்று சொல்லி, கவிஞனுக்கு முதல் அடையாளம் பெத்தடின் என்பதாக அர்த்தப்படுத்திக்கொண்டு, ஊசி போட்டுக்கொண்ட கவிஞ நண்பரை எனக்குத் தெரியும். பாரதியாரே கஞ்சா அடித்திருக்கிறார் என்று சொல்லி, கஞ்சா அடிக்கிற கயவாளிகளும் இருக்கிறார்கள். அவர் மாதிரி ஆக்ரோஷமாகக் கவிதை எழுதத்தான் வரவில்லை; அவர் மாதிரி கஞ்சாவாவது அடிப்போமே என்கிற எண்ணம்!

ஓரினச் சேர்க்கை என்பது ஒரு வக்கிரம். இயற்கைக்கு மாறான எதுவுமே வக்கிரம்தான். ‘வம்ச விருத்திக்காக மட்டும்தான் உடலுறவா? மனத் திருப்திக்கும்தானே? ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ருசி என்பது போல் எங்களுக்கு ஓரினச் சேர்க்கையில் ருசி. இதில் என்ன தப்பு?’ என்பது அவர்களின் கேள்வி. பசிக்குச் சாப்பிடாமல் ருசிக்குச் சாப்பிடப் போய்த்தான் மனிதனுக்கு இத்தனை வியாதிகள்!

‘இதனால் யாருக்கும் எந்த பாதகமும் இல்லை’ என்பது அவர்களின் இன்னொரு வாதம். தனிப்பட்ட யாரையும் அது நேரடியாகப் பாதிக்காமல் இருக்கலாம்; ஆனால், ஒட்டு மொத்த சமுதாயத்தையும் மறைமுகமாகப் பாதிக்கிறது. எல்லா வக்கிரங்களும் வெளிப்படையாகவே அரங்கேறத் தொடங்கிவிட்டால், அந்த உணர்வு இல்லாதவர்களுக்கும் ஒருமுறை அதையும் அனுபவித்துதான் பார்ப்போமே என்கிற தைரியம் வரும். அப்புறம் அது ஒரு ஃபேஷனாகும். தாங்கள் ஓரினச் சேர்க்கையாளர் இல்லையென்றால்தான் அது கேவலம் என்ற நிலை உருவாகும். சமுதாயம் சீரழியும்.

சினிமாவிலும், தொலைக்காட்சியிலும், பண்பலை ஒலிபரப்புகளிலும் காதல் புனிதமானது என்று ஓயாமல் பேசிப் பேசி, இன்றைக்குப் பள்ளி மாணவி்கூட தனக்கு ஒரு பாய்ஃப்ரெண்ட் இல்லாதது கேவலமானது என்று நினைத்து வருத்தப்படும் அளவுக்குக் கொண்டு வந்து விட்டுவிட்டோம். படிப்பை விடக் காதல்தான் முக்கியமாகப் போய்விட்டது மாணவர்களுக்கு. அவர்களை அப்படி ஆக்கி வைத்தது நாம்தானே?

பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட இருவர் மனம் ஒருமித்தால் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாமா? என்ன கண்றாவி இது! அவர்களின் ரசனை அந்த லட்சணத்தில் இருக்கிறதென்றால், கவுன்சலிங் கொடுத்துதான் திருத்தவேண்டுமே தவிர, எப்படியோ செய்துகொண்டு போ என்று அனுமதிப்பதா நியாயம்!

குடிப்பதற்குக் குடிமகன்களுக்கு உரிமை, கண்டபடி உடை அணிவதற்குப் பெண்களுக்கு உரிமை, ‘தொழில்’ செய்வதற்குப் பாலியல் தொழிலாளர்களுக்கு உரிமை, உடல் சுகம் தருவதற்கு விலைமகன்களுக்கும் உரிமை, ஓரினச் சேர்க்கையாளருக்கும் உரிமை என கேட்டவருக்கெல்லாம் உரிமைகளை அள்ளி வழங்கிக்கொண்டே போனால்...

ஹூம்... நாடு உருப்புட்ட மாதிரிதான்!

*****
முட்டாள்கள் தங்கள் கருத்தில் திடமாக இருக்கிறார்கள்; அறிவாளிகளோ தங்கள் கருத்தில் சந்தேகத்துடனேயே இருக்கிறார்கள். அதுதான் பிரச்னை!

3 comments:

butterfly Surya said...

மிகச்சரியான பதிவு.

இது இந்தியா! அமெரிக்கா இல்லை. இத்தகைய செயலை வரவேற்பது முறையல்ல... இது நம் இந்திய நாட்டிற்கு அவமானம் ஆகும்.

ஓரின சேர்க்கை ஒரு பேரழிவுக்கு நம்மை இட்டுச்செல்லும். பல நுற்றாண்டுகளுக்கு முன் ஒரு பிரதேசததையே அழித்தான் இறைவன் என்பது வேதங்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் பல தீய விளைவுகளை நாடு சந்திக்க நேரிடும்.


ஆணும் ஆணுமே ஒரே அறையில் தங்குவது கூட சந்தேக பார்வையை அளிக்கும்...

வெட்கப்படுகிறேன்...

Anonymous said...

http://sathyarajkumar.com/idamaaru

2005-ல் எழுதிய கதை.

:-)

[சத்யராஜ்குமார்]

Anonymous said...

மிகச்சரியான பதிவு