ஆண்டாள் அழகரில் அடிதடி!

டந்த புதன்கிழமை (17.11.10) இரவு ஒரு மணிக்கு என் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது. ‘இந்த நேரத்தில் யார்?’ என்று சற்றே அலுப்புடன் எழுந்து, ரிசீவரை எடுத்துக் காதில் வைத்துக்கொண்டதும், அடிவயிற்றில் கத்தி சொருகியதுபோல் இருந்தது.

“மாமா... மாமா... அடிக்கிறாங்க மாமா! ஐயோ..! காப்பாத்துங்க, காப்பாத்துங்க..!”

யார், என்ன என்று விசாரிப்பதற்குள்ளாக லைன் கட்டானது. மீண்டும் சிறிது நேரத்தில் போன். பதற்றத்துடன் எடுத்தேன்.

“நான்தான் முரளி பேசறேன். அங்கே ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கிற என் பையனை சீனியர் பசங்க காட்டுத்தனமா அடிக்கிறாங்களாம். எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. எதுனா பண்ணு ரவி!” என்றார் என் தங்கையின் கணவர், கலவரக் குரலில்.

மாமண்டூரில் உள்ள விஜயகாந்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் காலேஜில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறான் என் தங்கை மகன். முதலில் அலறியது அவன்தான் என்று புரிந்தது. உடனடியாக என்ன செய்வது என்று எனக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. ஜூனியர் விகடன் ஆசிரியர் திரு.அசோகனுக்கு அந்த ராத்திரியில் போன் போட்டு எழுப்பி விஷயத்தைச் சொன்னேன். தொடர்ந்து பலருக்கும் போன் மேல் போன் போட்டு, நிருபர் செந்தில் உதவியோடு காஞ்சிபுரம் பீட் போலீஸைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னேன். அவர்கள் உடனே பார்க்கிறேன் என்றார்கள்.

ஆனால், சிறிது நேரத்தில் அவர்கள் போன் செய்து, “சார்! அங்கே போய் விசாரிச்சோம். அப்படியெல்லாம் ஒண்ணும் கலாட்டா நடக்கலைன்னு அந்த காலேஜ் வார்டன் சொல்றாரே சார்!” என்றார். “உள்ளே போய்ப் பார்த்தீர்களா? நான் ஜூனியர் விகடன் சீஃப் எடிட்டர் பேசறேன்” என்றேன். “அப்படியெல்லாம் போக முடியாது சார்! விவகாரம் வேற மாதிரி ஆயிடும். பையனோட அப்பாவை ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுக்கச் சொல்லுங்க” என்றார்.

மீண்டும் என் தங்கை கணவருக்கு போன் செய்து, பீட் போலீஸ் எண்ணைக் கொடுத்துப் பேசும்படி சொன்னேன்.

இதற்கிடையில் என் தங்கை பையனை செல்லில் தொடர்பு கொண்டேன். “இப்ப ஓரளவுக்கு அமைதியா இருக்கு மாமா! எல்லாரும் போயிட்டாங்க. பசங்களை ரூம்ல வெச்சுப் பூட்டிட்டுப் போயிட்டாங்க. இப்ப எங்க ரூம்ல நான் மட்டும்தான் தனியா இருக்கேன்” என்றான். “நான் வரட்டுமா?” என்று கேட்டேன். “வேண்டாம் மாமா! ஹாஸ்டல் இப்ப அமைதியாயிடுச்சு! காலையில முதல் பஸ்ஸுக்கு அப்பா வரேன்னிருக்காரு!” என்றான்.

அதன்பின் எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. நாலு மணி வரையில் விழித்திருந்துவிட்டு, எப்போது தூங்கினேன் என்று ஞாபகம் இல்லை.

காலையில் ஆறரை மணிக்கு எழுந்ததும், மீண்டும் தங்கை மகனை செல்லில் தொடர்பு கொண்டேன். “அப்புறம் என்னப்பா ஆச்சு? தூங்கினியா?” என்றேன்.
“இல்லை மாமா! அந்த முரட்டுப் பசங்க விடியற்காலைல மூணரை மணிக்கு மறுபடியும் வந்து, வெளிக் கதவு பூட்டை உடைச்சுட்டு உள்ளே நுழைஞ்சு, தூங்கிட்டிருந்த என்னை எட்டி உதைச்சு எழுப்பினாங்க. பத்துப் பதினைஞ்சு பேரு சேர்ந்து என்னை அடிச்சு, உதைச்சாங்க. நாலரை மணி வரைக்கும் உதைச்சுட்டுப் போயிருக்காங்க. உடம்பெல்லாம் வலிக்குது மாமா!” என்று அழுதான்.

எனக்குக் கவலையாக இருந்தது. அவனது அப்பாவுக்கு செல்லில் தொடர்பு கொண்டேன். “பஸ்ஸில் வந்துகொண்டு இருக்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில் காலேஜ் வாசலில் இறங்கிவிடுவேன். போய்ப் பார்த்துவிட்டு போன் செய்கிறேன்” என்றார்.

என்னதான் நடக்கிறது காலேஜில்?

ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் சீனியர் (மூன்றாமாண்டு) மாணவர்கள் சிலருக்கு (சுமார் 30 பேர்) கிட்டத்தட்ட அடிமை போல எல்லாம் செய்து கொடுக்க வேண்டியது இரண்டாம் ஆண்டு, முதலாண்டு மாணவர்கள் கடமையாம். அவர்கள் சிகரெட் கேட்டால், தங்கள் காசில் ஓடிப் போய் வாங்கி வந்து கொடுக்க வேண்டுமாம்; செல்போன் ரீசார்ஜ் செய்து தரச் சொன்னால், தங்கள் செலவில் செய்து தரவேண்டுமாம்.

சில நாட்களுக்கு முன், தங்களுக்கு ட்ரிங்க் பார்ட்டி வைக்கவேண்டுமென்று சொல்லி, ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர்களை தலா ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்று கேட்டார்களாம். ஒரு சிலர் கொடுத்தும் இருக்கிறார்கள். என் தங்கை மகன் உள்பட மற்றவர்கள் அதற்கு மறுத்து, கல்லூரி முதல்வரிடம் புகார் செய்திருக்கிறார்கள். அவர் “ஆகட்டும். நடவடிக்கை எடுக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார். ஆனால், அந்த ரவுடிப் பிள்ளைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

புகார் கொடுத்த கோபத்தில்தான் இப்படி ஹாஸ்டல் அறைகளுக்குள் புகுந்து காட்டடி அடித்திருக்கிறார்கள் அந்த நாய்கள். இருபது முப்பது பேராகத் திரண்டு வந்து ஒவ்வொரு ரூமிலும் புகுந்து, அங்கு தங்கியிருக்கும் ஐந்தாரு பேரை அடித்து உதைக்க வேண்டியது. இப்படியே ஒவ்வொரு அறையாகச் சென்று விடிய விடிய அராஜகம் செய்திருக்கிறார்கள் அந்த ராஸ்கல்கள்.

இந்தப் பிரச்னை உச்ச கட்டத்துக்குச் சென்றதுதான் இப்போதே தவிர, இது ரவுடி ராஜ்ஜியம் பல மாதங்களாகவே நடந்து வருகிறதாம். அப்போதெல்லாம் யாராவது ஓரிரு பையன்கள் மட்டும் அந்த ரவுடிக் கும்பலிடம் மாட்டி உதைபடுவானாம். ஒரு பையனை பேண்ட்டைக் கழற்றிவிட்டு காலேஜ் வளாகத்தில் துரத்தித் துரத்தி அடித்திருக்கிறார்களாம். புகார் சொன்னால், பிரின்ஸிபாலும் அவர்கள் மீது எந்த ஆக்‌ஷனும் எடுக்கப்போவதென்னவோ இல்லை; தவிர, நமக்குப் படிப்புக் கெடுவதோடு, புகார் தந்த ஆத்திரத்தில் மறுபடியும் வந்து உதைப்பார்கள்; எனவே, இத்தோடு அவர்கள் வெறி அடங்கட்டும்; இனி, நம் வழியைப் பார்ப்போம் என்று பல பிள்ளைகள் பெற்றோரிடம்கூடச் சொல்லாமல் இந்த விஷயத்தை மறைத்திருக்கிறார்கள்.

போன மாதம் ஒரு பையன் இதே மாதிரி சீனியர் பிள்ளைகளின் சித்ரவதைக்குள்ளாகி, தன் தந்தையிடம் அதை மறைக்காமல் சொல்லிவிட்டான். அவர் கோபத்துடன் வந்து கல்லூரி முதல்வரிடம் புகார் செய்திருக்கிறார். அவர் அப்போதும் கூலாக, “பிள்ளைகளுக்குள்ள அடிதடி சண்டை வர்றது சகஜம்தாங்க. இதைப் பெரிசுபடுத்தாதீங்க. விடுங்க, இனிமே இதுபோல நடக்காம நான் பார்த்துக்கறேன்” என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்.

“இப்படித்தான் மாமா அவர் ஒவ்வொரு தடவையும் சொல்றார். ஆனா, அந்தப் பசங்களை எதுவும் பண்ண மாட்டார். சும்மா வார்ன் பண்ணி அனுப்பிடுவார். அவங்க மறுபடியும் வந்து ‘புகாராடா கொடுக்கறீங்க’ன்னு உதைச்சுட்டுப் போவாங்க” என்றான் என் தங்கை மகன்.

இந்த முறை, என் தங்கையின் கணவர் உள்பட அடிபட்ட பிள்ளைகளின் தகப்பனார்கள் யாவரும் வெளியூரிலிருந்து திரண்டு வந்து, கல்லூரி முதல்வரைச் சந்தித்து, மேற்படி ரவுடிப் பிள்ளைகளை, குறிப்பாக ஒரு எட்டுப் பேரை கல்லூரியை விட்டே நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அவரும் ‘ஆகட்டும், செய்கிறேன்’ என்று சமாதானப்படுத்தினாராம். பின்னர், அப்பாக்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை ஹாஸ்டலில் விடாமல் அவரவர் ஊருக்கு அழைத்துப் போய்விட்டார்கள்.

இன்றைக்கு செமஸ்டர் தேர்வு எழுதுவதற்காக ஊரிலிருந்து வந்திருந்தான் என் தங்கை மகன். “மாமா! நான் சொன்னேன் பார்த்தீங்களா, பிரின்ஸிபால் அந்தப் பசங்களை எதுவும் பண்ண மாட்டார்னு. அதே போல ஆயிடுச்சு! அந்த எட்டுப் பேரையும் வெறுமே ஒரு வாரத்துக்கு சஸ்பெண்ட் பண்ணியிருக்காரு. அவ்வளவுதான். அவங்களுக்கு அது தண்டனையே இல்லே. லீவு விட்ட மாதிரி ஜாலியா வெளியே போய் சுத்திட்டு வந்து மறுபடியும் எங்களைப் புடிச்சு அடிக்கப் போறாங்க. அதான், நடக்கப் போகுது” என்றான்.

அன்றைக்கு ராத்திரி அந்த அடி, உதை அமர்க்களம் நடந்தது எதுவும் தனக்குத் தெரியாது; தனக்குக் காதில் விழவில்லை என்று சாதிக்கிறார் காலேஜ் வார்டன். பீட் போலீஸ் வந்து விசாரித்துவிட்டுப் போன பிறகுதான் கல்லூரித் தரப்பிலிருந்து சிலர் வந்து சமாதானப்படுத்தி அந்த ரவுடிப் பிள்ளைகளை அப்புறப்படுத்தியிருக்கிறார்கள். அடிபட்ட மாணவர்களை அறைகளுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு, ‘இனி ஒன்றும் பயமில்லை’ என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். அந்தப் பொறுக்கிப் பயலுகள் மீண்டும் விடியற்காலை மூணரை மணிக்குத் திரும்ப வந்து, பூட்டை உடைக்கிற சத்தம், அங்கிருந்து சற்றுத் தொலைவில் இருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் வரை கேட்டு, அங்கிருந்த பெண்கள் விழித்துக்கொண்டு தனக்குத் தெரிந்தவர்களுக்கு இது பற்றித் தகவல் சொல்லி விசாரித்திருக்கிறார்கள். ஆனால், தான் அசந்து தூங்கிக் கொண்டு இருந்ததாகவும், தன் காதில் எந்தச் சத்தமும் விழவில்லை என்றும் சாதிக்கிறார் காலேஜ் வார்டன்.

முன்பெல்லாம் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், குடும்பத்தில் பெரியவர்கள் ஆகியோர்தான் பகை உணர்ச்சியை மனதில் கொண்டு அடிதடிகளில் ஈடுபடுவார்கள். படிக்க வேண்டிய வயதில், நாளைய இந்தியாவை உருவாக்கப் போகிறார்கள் என்று நாமெல்லாம் கனவு கண்டுகொண்டு இருக்கும் கல்லூரி மாணவர்கள் இப்படி அடியாட்களாக மாறி மாமூல் விசாரிப்பதையும், அடிதடியில் இறங்குவதையும் என்னால் கொஞ்சம் கூட ஜீரணிக்கவே முடியவில்லை.

ஊருக்கெல்லாம் நாட்டாமை சொல்லும் விஜயகாந்த் முதலில் தன் கல்லூரியை ஒழுங்காக நடத்திக் காட்டட்டும்!

***
எச்சரிக்கையாக இருப்பது கோழைத்தனமும் இல்லை; அலட்சியமாக இருப்பது தைரியமும் இல்லை!

சாதனை மனிதர் மனோஹர் தேவதாஸ்!

‘ஞாநி’யின் கேணிக் கூட்டத்தில் கலந்துகொண்டு பல மாதங்களாகிவிட்டன. ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு தவிர்க்க முடியாத காரணம். இந்த மாதக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்பவர் ஓவியர் மனோஹர் தேவதாஸ் என்றறிந்ததும், இம்முறை எப்படியாவது கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று தீர்மானித்தேன். அதற்குக் காரணம், மனோஹர் தேவதாஸ் வெறுமே ஓர் ஓவியர் என்பது மட்டுமல்ல; அதற்கும் பின்னால் இருக்கிற அவரது தன்னம்பிக்கை, மன உறுதி, மனித நேயம் மற்றும் அன்றில் பறவைகள் போன்ற ஆத்மார்த்த தாம்பத்திய வாழ்க்கை.

விகடன் பொக்கிஷம் பகுதி தயாரிப்புக்காக அந்தக் கால விகடன் இதழ்களைப் புரட்டிக்கொண்டு இருந்தபோது, இறையருள் ஓவியர் சில்பியின் கோட்டுச் சித்திரங்களைப் பார்த்துப் பிரமித்தேன். அதற்கும் வெகு காலம் முன்பே சில்பி பற்றியும், அவரது தெய்வீக ஓவியங்கள் பற்றியும் எனக்குத் தெரியும் என்றாலும், எனக்குக் காணக் கிடைத்தது அவருடைய ஒரு சில ஓவியங்களே! ஆனால், பழைய விகடன் இதழ்களைப் புரட்டப் புரட்ட, ‘தென்னாட்டுத் திருச்செல்வங்கள்’ என்னும் தொடருக்காக அவர் ஒவ்வொரு தலமாகச் சென்று, அங்கே உள்ள கோயில் கோபுரங்களையும், கடவுளர் சிலைகளையும் கோட்டுச் சித்திரங்களாக வடித்திருந்ததைப் பார்க்கப் பார்க்க, ‘இந்த அளவுக்கு நுணுக்கமாக ஒருவரால் வரைய முடியுமா!’ என்று பிரமிப்பாக இருந்தது. சக்தி விகடன் இதழுக்குப் பொறுப்பேற்றதும், சில்பியின் தெய்வீக ஓவியங்களை மீண்டும் தொடராக இதில் வெளியிடத் தொடங்கினேன். வாசகர்களிடம் அதற்கு அமோக வரவேற்பு!

‘என்ன... மனோஹர் தேவதாஸ் பற்றிச் சொல்லத் தொடங்கிவிட்டுச் சம்பந்தமே இல்லாமல் இன்னொரு ஓவியர் பற்றிச் சொல்லிக்கொண்டு போகிறீர்களே!’ என்று நினைக்கலாம். விஷயத்திற்கு வருகிறேன்.

ஓவியர் மனோஹர் தேவதாஸைப் பற்றி ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்புதான் தெரிந்துகொண்டேன். ஓவியர் சில்பியின் நுணுக்கமான கோட்டுச் சித்திரங்கள் போலவே மிக அற்புதமாக வரையக்கூடியவர் அவர் என்பதை அறிந்தேன். சில்பி தெய்வீக உருவங்களை அதிகம் வரைந்தார் என்றால், மனோஹர் தேவதாஸ் தான் வளர்ந்த மதுரை நகரை, அதன் தெருக்களை, வீடுகளின் அழகை, மீனாட்சியம்மன் ஆலயத்தை என ஒவ்வொன்றையும் மிக அற்புதமாக வரைந்திருக்கிறார்.

அந்தப் படங்களைப் பார்த்துவிட்டு, ‘அட!’ என்று வியந்தபோது, அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட ஒரு விஷயம் ‘அம்மாடி!’ என்று அவர் படைப்புகளைப் பற்றி மிக மிக ஆச்சரியப்பட வைத்துவிட்டது. பார்வைக் குறைபாடு உள்ளவர் அவர். அவரது இரு கண்களில் ஒன்றில் முழுப் பார்வையும் பறிபோய்விட்டது; மற்றொரு கண் மூலம் அவர் அதிக பட்சம் ஒரு ரூபாய் அளவிலான பகுதியையே பார்க்க முடியும். அதாவது, ஒரு முழு வெள்ளைத்தாளைக்கூட, ஏ4 ஷீட் என்று சொல்கிறோமோ, அதைக்கூட அவரால் முழுதாகப் பார்க்க முடியாது. பார்வையை வெள்ளைத் தாளில் பதித்து, ஸ்கேன் செய்வது போல் நகர்த்திக்கொண்டே வந்தால்தான், அந்தத் தாளில் எங்கெங்கே என்னென்ன இருக்கிறது என்று தெரியும். அதில் ஏதேனும் ஒரு படம் வரையப்பட்டு இருந்தால், அதை அவரால் முழுதாகப் பார்த்து ரசிக்க முடியாது. இன்ச் பை இன்ச்சாகத்தான் பார்த்து, ‘ஓஹோ! இந்தப் படம் இப்படி இருக்கிறதா!’ என்று மனசுக்குள் அதற்கு முழுதாக ஒரு வடிவம் கொடுத்துக் கொள்ள முடியும்.

அந்தச் சாதனையாளரை நேரில் பார்க்க வேண்டும் என்னும் பெருவிருப்பம் காரணமாக, நேற்றைய ஞாயிறு எனக்கு இருந்த அலுவல்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, ப்ளஸ் ஒன் படிக்கும் என் மகனையும் அழைத்துக் கொண்டு போனேன். தம்பதி சமேதராக இருக்கும் அவருடைய அற்புதமான புகைப்படங்கள் இரண்டை ஏ3 சைஸில் கலர் பிரிண்ட் அவுட் எடுத்து, லேமினேட் செய்து, என் அன்புப் பரிசாக அவரிடம் கொடுத்தேன். அந்த மகா கலைஞனுக்கு ஏதோ என்னாலான எளிய காணிக்கை.

எங்களிடையே மிக இயல்பாக உரையாற்றினார் மனோஹர் தேவதாஸ். வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்திருந்தபோதிலும், அதற்கான் அறிகுறிகள் இன்றி, மிக நகைச்சுவையோடு அவர் பேசிய விதம் என்னை ஆச்சர்யப்படுத்தியது. அந்தக் காலத்தில் தன்னுடைய தோற்றம், மனைவி மஹிமாவை முதன்முதலில் சந்தித்தது, அவளை நேசித்தது, அவள் மனத்தில் இடம் பிடிப்பதற்காகத் தான் செய்த திருவிளையாடல்கள், அவளுக்காகவே வரைந்த ஓவியங்கள், திருமண வாழ்க்கை, இவருக்காக மஹிமா செய்த தியாகங்கள், ஆத்மார்த்த அன்பு என ஒவ்வொன்றையும் மெலிதான நகைச்சுவை இழையோட சுவாரஸ்யமாக வர்ணித்துக்கொண்டே வந்தவர், சில ஆண்டுகளுக்கு முன்னால் தூக்கத்திலேயே மஹிமாவின் உயிர் பிரிந்ததைச் சொல்லும்போது, கேட்டுக்கொண்டிருந்த எங்களுக்கெல்லாம் மனசு பாரமாகிப் போனது. அவர் மனைவி இறந்துவிட்டார் என்பது இந்தக் கூட்டத்தில் இவர் சொல்லித்தான் எனக்குத் தெரியும். எனவே, திடுக்கிட்டுப் போனேன்.

அவருடைய படங்களை லேப்-டாப்பில் பதிந்துகொண்டு வந்து, பெரிய திரையில் அவற்றை ஒளியிட்டுக் காட்டி, அதற்குப் பொருத்தமாக அவர் தனது வாழ்க்கையைத் தொடர்ந்து விவரித்துச் சொன்ன விதம் ரசனையாக இருந்தது. திருப்பரங்குன்றம் கோயில், பின்னணியில் மலை, புகைவிட்டுக்கொண்டு செல்லும் ரயில், தோப்புகள் என அவர் வரைந்திருந்த கோட்டுச் சித்திரத்தைப் பெரிய திரையில் பார்த்தபோது, ஏதோ சினிமாக் காட்சியைக் காண்கிற மாதிரி மிகத் தத்ரூபமாக இருந்தது.

உரை முடிந்து கேள்வி நேரத்தில், “எத்தனையோ இழப்புகளைக்கூடத் தாங்கிவிடலாம். ஆனால், உங்களின் ஒரு பாதியான மனைவி இறந்ததை எப்படித் தாங்கிக் கொண்டீர்கள்?” என்று கேட்டேன்.

“தாங்க முடியவில்லைதான். ரத்த அழுத்தம் எகிறிப் போனது. ஆனால், எத்தனை நாளைக்குத்தான் முடங்கியிருப்பது? எனவே, என்னை நானே சுதாரித்துக் கொண்டேன். அவள் பெயரில் ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்தேன். ‘கொடுப்பதும் ஒரு கலை’ என்று எனக்குக் கற்றுக் கொடுத்தவள் அவள். எனவே, அவள் பெயரில் ட்ரஸ்ட் அமைத்து, என்னால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்து வருகிறேன். தவிர, அவள் நினைவை மறக்க மேலும் மேலும் நிறையப் படங்களை வரைகிறேன். எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும், இது அவளுக்குப் பிடிக்குமே, இதை அவளுக்காகத்தானே செய்கிறேன் என்று நினைத்துக்கொண்டு செய்வேன்” என்றார்.

மனசெல்லாம் ஈரமாகிப் போனது எனக்கு.

(மனோஹர் தேவதாஸ் - மஹிமா தம்பதி பற்றி இன்னும் விரிவாக அறிய விரும்புகிறவர்கள் எனது ‘உங்கள் ரசிகன்’ வலைப்பூவுக்குச் செல்லுங்கள்.)

***
நமக்குத் தரப்பட்டதைக் கொண்டு நாம் நடத்துவது பிழைப்பு; நாம் தருவதைக் கொண்டு நாம் அமைப்பது வாழ்வு!