காந்தர்வக் குரலுக்கு வயது 86!


நுண்ணிய சங்கீத ஞானமும் தெள்ளிய தமிழ் உச்சரிப்புமாக இரண்டு தலைமுறைகளைக் கட்டிப் போட்ட குரலின் பெயர் - டி.எம்.எஸ்.

எம்.கே.தியாகராஜ பாகவதர் ஒரு ஹோட்டல் அறையில் சாதகம் செய்யும்போது ஜன்னல் வழியாகப் பார்த்து, தானும் அதுபோலப் பாட வேண்டுமென்று ஆசைப்பட்ட சிறுவனாக இருந்து, பிற்காலத்தில் ஏகப்பட்ட பேர்களின் காது மடல்களில் கூடுகட்டிக் குடியிருந்த வானம்பாடி என்பார்கள் டி.எம்.சவுந்திரராஜனை.

டி.எம்.எஸ்-ஸின் எண்பத்தாறாவது பிறந்த நாள் பிரம்மாண்டமான விழாவாகக் கொண்டாடப்படவிருக்கிறது. இந்த வயதிலும் மாறாத குரல் வளத்துடன் மலேசியாவிலும் மதுரையிலும் கச்சேரிகள் முடித்துவிட்டுத் திரும்பியிருந்த டி.எம்.எஸ்-ஸைச் சந்தித்தோம்.

''உங்களுக்கு மதுரையில் பாராட்டு விழா நடக்கப் போகிறதாமே...'' என்றதும் ஸ்ருதி பிசகாத குரலில் பேச ஆரம்பித்தார்.

''ரசிகர்கள் என்மேல் வைத்திருக்கிற அபிமானத்தை நினைத்தால் ஆனந்தமாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது. போன வருடம் மார்ச் 24-ம் தேதி என் 85-வது பிறந்தநாளை வைரமுத்து கொண்டாடினார். அந்த மேடையில் என்னைப் பாராட்டிப் பேசிய தம்பி மு.க.அழகிரி, 'அடுத்த ஆண்டு உங்கள் பிறந்த நாளை நான் பெரும் விழாவாகக் கொண்டாடப் போகிறேன். அது எப்படி இருக்கும் என்று அப்போது பார்ப்பீர்கள்' என்று பேசினார். கோடை மழை காரணமாக அந்த விழா தள்ளிப்போயிருக்கிறது.

அழகிரிக்குப் பால்யத்திலிருந்தே என்னை ரொம்பப் பிடிக்குமாம். என் பாடல்களை கேஸட்டில் பதிவு செய்து வாக்மேனில் கேட்டுக்கொண்டே இருப்பாராம். ஒருநாள் அவர் கண்ணை மூடிப் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறார். அதைப் பார்த்த கலைஞர், 'என்ன பாட்டு?' என்று கேட்டுவிட்டு, 'நீ மட்டும்தான் கேட்கணுமா? பெரிய டேப்ரிக்கார்டரில் போடு. நானும் கேட்கிறேன்' என்றாராம். இதை தம்பி அழகிரியே என்னிடம் சொன்னார்!''

''உங்கள் வாழ்க்கை வரலாறு தொலைக் காட்சித் தொடராக வரப்போகிறதாமே... அதற்கான வேலைகளெல்லாம் எப்படிப் போகின்றன..?''

''என் ஐம்பது ஆண்டுகால இசைப் பயணம் 'இமயத்துடன்...' என்கிற பெயரில் தொடராகத் தயாராகிறது. ஏ.சி.திருலோகசந்தரிடம் உதவி இயக்குநரா இருந்த விஜய்ராஜ் இயக்குகிறார். சினிமா உலகத்துக்குள் நுழைவதற்காக நான் பட்ட பாடுகளை எல்லாம் பழைய கால ஸ்டுடியோவிலேயே ஷூட் பண்ணியிருக்கார். பழம்பெரும் இசையமைப்பாளர்கள், எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் இவங்களுக்கெல்லாம் நான் பாடின பாடல்கள், அவங்களோட என் அனுபவங்கள்னு கலந்துகட்டித் தயாராகி இருக்கிறது. மலேசியாவுக்கெல்லாம் போய் ஷூட் பண்ணியிருக்கோம்.
தொடர் தயாராகும்போது ஒருகட்டத்தில் சின்னதா முடை வந்துச்சு. அதைக் கேள்விப்பட்ட மு.க.அழகிரி, விஜய்ராஜைக் கூப்பிட்டனுப்பினார். 'இந்தத் தொடரை நல்லா எடுங்க. கலைஞர் டி.வி-யில் போட ஏற்பாடு செய்யறேன். வேற எந்த உதவியா இருந்தாலும் செய்றேன்'னு சொல்லியிருக்கார் அழகிரி. அதுக்கப்புறம் வேகம் பிடிச்ச ஷூட்டிங், இப்போது முடியும் கட்டத்துல இருக்கு. 'கிருஷ்ணவிஜயம்' படத்துக்காக 1946-ல் பதிவான என் முதல் பாடலான, 'ராதே நீ என்னைவிட்டு ஓடாதேடி' பதிவான கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில்கூடப் படமெடுத்திருக்காங்க!'' என்று ஓர் இளைஞரின் உற்சாகத்தோடு பகிர்ந்துகொண்டவர்,

''அறுபது வருஷங்களா இடைவெளி விடாமல் பாடிட்டிருக்கிறதால, இன்னும் என் சாரீரம் நல்லா இருக்கு. அதான் இன்னும் பாடிக்கிட்டிருக்கேன். எல்லாம் அவன் அருள்!'' என்று வானத்தைக் காட்டுகிறார்.

''இந்த வயதிலும் உற்சாகமிழக்காமல் இருப்பது என்ன ரகசியம்?'' என்றோம்.

''காலை ஐந்து மணிக்கு எழுந்துடுவேன். ஷண்முக கவசத்தைப் பாராயணம் செய்தபடி வீட்டுக்குள்ளேயே வாக்கிங் செய்வேன். அப்புறம் அஞ்சு நிமிஷம் ஓய்வு. டாக்டர் ஒருத்தங்ககிட்டே, 'ஆல்ஃபா மைண்ட் பவர்' கத்துக்கிட்டேன். அந்த முறையில் உட்கார்ந்து, 'என் நோய் நொடியெல்லாம் போகட்டும். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். நோய்களே, என்னை விட்டுப் போய்விடுங்கள்' என்று மனதுக்குள்ளேயே சொல்லிக்கொள்வேன். இயற்கையை ஒட்டி வாழ்வதால், அதுவே எனக்குப் பாதுகப்பாக இருக்கிறது. இறைவன் அருளால் பாடுகிறேன். அவற்றைக் கேட்டு என் ரசிகர்கள் மனமார வாழ்த்துகிறார்கள். அந்த வாழ்த்துகளாலேயே குறையேதும் இல்லாமல் வாழ்கிறேன்!'' - நெகிழ்ச்சியோடு கலகலவென சிரிக்கிறது அந்த வெண்கலக் குரல்!

- பி.என்.பரசுராமன்
படங்கள்: 'ப்ரீத்தி' கார்த்திக்


(ஜூனியர் விகடன் ஏப்ரல் 13, 2008 தேதியிட்ட இதழிலிருந்து...)

பின்குறிப்பு: இந்த இதழ் வெளியான ஜூனியர் விகடன் இதழை எடுத்துக்கொண்டு திரு.பி.என்.பரசுராமன் அவர்களோடு சென்றபோதுதான் என் அபிமான பாட்டுத் தலைவன் டி.எம்.எஸ். அவர்களை முதன்முறை சந்தித்தேன்.

பாட்டுத் தலைவனுக்கு ஒரு கடிதம்!

ன் அபிமான பாட்டுத் தலைவன் டி.எம்.எஸ். ஐயா அவர்களுக்கு,
உங்களின் 45 ஆண்டுக் கால தீவிர ரசிகன் ரவிபிரகாஷ் பணிவன்புடன் எழுதிக்கொள்வது.
வணக்கம். நினைவு தெரிந்த நாள் முதலாக, உங்களின் பாடல்களைக் காது குளிரக் கேட்டு, சுவாசித்து வளர்ந்தவன் நான். உங்களின் அபிமானி, ரசிகன், தீவிர ரசிகன் என்பதையெல்லாம் தாண்டி, வெறிபிடித்த ரசிகன் என்றே சொல்லலாம்.
இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது... 'சரஸ்வதி சபதம்' படம் வெளியானபோது, நான் ஏழு வயதுச் சிறுவன். அன்று, 'அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி' என்று என் காதுகளில் விழுந்த உங்களின் கம்பீரக் குரல், என்னை அந்த இளம் வயதிலேயே சிலிர்க்க வைத்தது. 'தெய்வம் இருப்பது எங்கே... அது இங்கே...' என்று நீங்கள் பாடியதைக் கேட்டபோது, தெய்வத்தையே நேரில் கண்ட பரவசத்தை அடைந்தேன். 'ராணி மகாராணி, ராஜ்ஜியத்தின் ராணி' என்ற பாடலில் உங்கள் குரலில் தெறித்த குழைவும் நெளிவும் நையாண்டியும் என்னை மிகவும் சொக்கவைத்தன. 'கல்வியா, செல்வமா, வீரமா... அன்னையா, தந்தையா, தெய்வமா...' என்ற பாடலில் மயங்கி, அதை நான் திரும்பத் திரும்ப எத்தனை ஆண்டுகளாகப் பாடிக்கொண்டு இருந்தேன் என்பதற்குக் கணக்கு வழக்கே இல்லை. (எட்டாம் வகுப்பு படிக்கும்போது, மாவட்ட அளவில் பள்ளிகளுக்கான போட்டிகளில், வழக்கமான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் தவிர, பாட்டுப் போட்டியிலும் தைரியமாகக் கலந்துகொண்டு, நான் இந்தப் பாடலைத்தான் பாடி முதல் பரிசு பெற்றேன்!)
பள்ளிப் பிள்ளைகளான நாங்கள் சிவாஜி ரசிகர்களாகவும், எம்.ஜி.ஆர். ரசிகர்களாகவும் பிரிந்திருந்தோம். நான் சிவாஜி ரசிகன். எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கொஞ்சம் முரட்டுத்தனமாக இருப்பார்கள் என்பது அப்போதைய என் எண்ணம். அதனால் அவர்களிடமிருந்து நான் எப்போதும் கொஞ்சம் விலகியே இருப்பேன். ஆனாலும், எம்.ஜி.ஆர். படப் பாடல்களால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். 'கடவுள் எனும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி, விவசாயி...' என கிராம பஞ்சாயத்து போர்டு உச்சியில் கட்டியிருக்கும் புனல் வடிவ ஸ்பீக்கர் அலறுகிறபோது, என் நாடி நரம்புகளெல்லாம் சிலிர்க்கும். 'நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்... நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை விதைக்கணும்...' என்று உங்களின் ஓங்கி உயர்ந்த மிடுக்கான குரல்தான், என்னை உள்ளூர எம்.ஜி.ஆர். ரசிகனாகவும் மாற்றிவிட்டது என்றால் மிகையில்லை.
அந்தக் காலத்தில், ஒரு சாக்லெட் டப்பாவின் மூடியில் உங்களின் கம்பீரமான உருவம், பட்டையாக விபூதி பூசிய நெற்றியோடு தெய்வீக உணர்வைத் தரும் விதமாக அச்சிடப்பட்டிருக்கும். அப்படி ஒரு பெட்டியை எங்கள் கிராமத்துப் பெரியவர் ஒருவரிடம் நான் பார்த்தேன். உங்களின் படம் பதிந்திருந்த பெட்டி என்பதற்காகவே, அதை எனக்குத் தரச் சொல்லி அந்தப் பெரியவரிடம் தினம் தினம் கெஞ்சிக் கூத்தாடி, நச்சரித்து ஒரு நாள் வாங்கிக்கொண்டுவிட்டேன். அதில்தான் என் பேனா, பென்சில்களைப் போட்டுக்கொண்டு, பெருமையோடு ஸ்கூலுக்குப் போய் வருவேன்.
நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போதுதான், கிராமத்தை விட்டு விழுப்புரம் வந்தேன். விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷன் பிள்ளையார் கோயில் விழாவில் கச்சேரி செய்ய, ஆண்டுக்கு ஒருமுறை நீங்கள் வருவீர்கள். பொதுவாகவே கூட்டமென்றால் பயந்து நடுங்கி, விலகிச் சென்றுவிடும் நான் உங்களைக் காண வேண்டும் என்பதற்காக, அத்தனைக் கூட்டத்துக்கு மத்தியிலும் அடித்துப் பிடித்துக்கொண்டு உள்ளே நுழைந்து, முன் வரிசையில் காத்திருந்து, நீங்கள் பாடுவதைப் பரவசத்தோடு மெய் சிலிர்க்கப் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறேன்.
என் தாத்தா உங்களின் ரசிகராக இருந்தவர். 'தூக்குத் தூக்கி' படப் பாடல்களையெல்லாம் அவர் சிலாகித்துச் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவருக்குப் பின், என் அப்பாவும் உங்களின் பரம ரசிகர். ஆனால், அவரின் அபிமான பாடகர் டி.ஆர்.மகாலிங்கம்தான். இருப்பினும், 'கௌரவம்' படத்தில் நீங்கள் பாடிய 'கண்ணா... நீயும் நானுமா...', 'ராஜபார்ட் ரங்கதுரை' படத்தில், 'இன்குலாப் ஜிந்தாபாத்... இந்துஸ்தான் ஜிந்தாபாத்' போன்ற பாடல்களை டி.ஆர்.மகாலிங்கம் என்ன, வேறு யாராலுமே பாடமுடியாது என்று அடித்துச் சொல்லுவார். சத்தியமான வார்த்தை! உங்களின் பக்தி ரசம் இழைந்தோடும் 'கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன், நற்கதி அருள்வாய் அம்மா...' என்ற பாடலை உருகி உருகிப் பாடுவார் அப்பா. இன்றைக்கு அப்பாவின் வயது 77.
'அழகென்ற சொல்லுக்கு முருகா', 'சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா...', 'உள்ளம் உருகுதையா முருகா உன்னடி காண்கையிலே...' 'மெல்லச் சிரிக்கும் கந்தன் புன்னகையில்...' என உங்களின் எந்தவொரு பக்திப் பாடலைக் கேட்டாலும், அந்த முருகப் பெருமானே எங்கிருந்தாலும் இறங்கி ஓடிவந்துவிடுவான் என்று தோன்றும். 'மனம் கனிந்தே நீ அருள் புரிவாய்...' என்று நெகிழ வைக்கும் உங்களின் குரலைக் கேட்டால், அந்த முருகன் அருள் புரியாமலும் போய்விடுவானா என்ன?
40, 45 ஆண்டுகளுக்கு முன் பொதுக்கூட்டங்களிலும், டீக்கடைகளிலும் கேட்டு மயங்கிய உங்களின் குரலை, இன்று விஞ்ஞான வளர்ச்சியின் உதவியால், வசதியாக கம்ப்யூட்டரில் பதிவு செய்து, ஸ்பீக்கரிலும் இயர்போனிலும் தினம் தினம் கேட்டு ரசித்துக்கொண்டு இருக்கிறேன்.

'
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து...',
'இன்பமே... உந்தன் பேர் பெண்மையோ...',
'நினைத்தேன் வந்தாய் நூறு வயது...',
'ஆடலுடன் பாடலைக் கேட்டேன்...',
'பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த, ஊர்வலம் நடக்கின்றது...',
‘இன்கிலாப் ஜிந்தாபாத், இந்துஸ்தான் ஜிந்தாபாத்..’
'எங்கே நிம்மதி...',
'பொன்மகள் வந்தாள், பொருள்கோடி தந்தாள்...',
'பூமாலையில் ஓர் மல்லிகை...',
'நான்கு குணம் சேர்ந்ததும் ஓர் பெண்ணிடமோ...',
உன் கண்ணில் நீர் வழிந்தால்...”
‘கண்ணா... நீயும் நானுமா...’
‘பாலூட்டி வளர்த்த கிளி...’
'பச்சைக் கிளி முத்துச் சரம்...',
‘வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும்...’
‘நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே...’
‘ஆடாத மனமும் உண்டோ...’
‘ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை...’
‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்...’
‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’
’மலர்ந்தும் மலராத பாதி மலர் போல...’
'நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், அவள் மாம்பழம் வேண்டும் என்றாள்...',
ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டாள்...’
'இனியவளே, என்று பாடி வந்தேன்...',
'இதோ எந்தன் தெய்வம் முன்னாலே...',
'ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா...',
'வேலாலே விழிகள்...',
’எங்கே அவள் என்றே மனம்...’
'நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என காதல் தேவதை சொன்னாள்...',
'மல்லிகை முல்லை, பொன்மொழிக் கிள்ளை...',
'உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று...',
'பொன்னை விரும்பும் பூமியிலே...',
'ஆறு மனமே ஆறு...',
'முத்துக்களோ கண்கள்... தித்திப்பதே கன்னம்...',
'பொன்னுக்கென்ன அழகு, பூவுக்கென்ன பெருமை...',
'அமைதியான நதியினிலே ஓடம்...',
'உன்னைச் சொல்லிக் குற்றமில்லை...',
'மயக்கம் எனது தாயகம்...',
'காகிதத்தில் கப்பல் செய்து...',
'ஒரு காலத்திலே என்னைக் கட்டிப்போட ஒரு ராஜ்ஜியம் இருந்தது...',
'எந்தன் பொன்வண்ணமே...',
'மயக்கமென்ன இந்த மௌனமென்ன...',
'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்...',
'முத்தைத்தரு பத்தித் திருநகை...',
'... ராஜா! நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்...',
'அன்பு நடமாடும் கலைக்கூடமே...',
'பாட்டும் நானே, பாவமும் நானே...',
'தம்பீ... நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று...',
நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற...’
‘தேரு பாக்க வந்திருக்கும் சித்திரப் பொண்ணே...’
'முத்து நகையே உன்னை நானறிவேன்...',
'அம்மம்மா... தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்...',
'நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்...'
மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள்...’
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...’
‘குடிமகனே, பெருங்குடி மகனே...’
‘ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்...’
‘ஓடி ஓடி உழைக்கணும்... ஊருக்கெல்லாம் கொடுக்கணும்...’
‘பொண்ணா பொறந்தா ஆம்பிளை கிட்டே கழுத்தை நீட்டிக்கணும்...’
‘கடவுள் எனும் முதலாளி...’
‘நல்ல நல்ல நிலம் பார்த்து...’
‘அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி...’
‘தெய்வம் இருப்பது எங்கே...’
‘யார் தருவார் இந்த அரியாசனம்...’
‘இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம்...’
’நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்...’
‘யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க’.
’அம்மாடி... பொண்ணுக்குத் தங்க மனசு...’
’மல்லிகை முல்லை... பொன்மொழிக் கிள்ளை...’
‘மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்...’
‘காதல் ராஜ்ஜியம் எனது...’
‘’சின்னஞ்சிறிய வண்ணப் பறவை எண்ணத்தைச் சொல்லுதம்மா...’
‘ஹா... யாரடி நீ மோகினி’
‘பம்பை உடுக்கை கட்டி பரிவட்டம் மேலே கட்டி...’
‘தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா...’
’அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்’
‘தரை மேல் பிறக்க வைத்தான்...’
‘தொட்டால் பூ மலரும்...’
‘’ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா...’
‘மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று’
’நீயே உனக்கு என்றும் நிகரானவன்...’
‘பிருந்தாவனத்தில் பூ எடுத்து...’
‘மனம் என்னும் மேடை மீது...’
’மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்...’
‘ஏனழுதாய் ஏனழுதாய் என்னுயிரே ஏனழுதாய்...’
‘அவளுக்கென்ன அழகிய முகம்’
‘என் கேள்விக்கென்ன பதில்...’
‘யாரந்த நிலவு, ஏனிந்த கனவு...’
‘படைத்தானே, மனிதனை ஆண்டவன் படைத்தானே...’

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இதற்கு முடிவே இல்லை. நான் திரும்பத் திரும்பக் கேட்டு ரசித்த, இன்றைக்கும் கேட்டுக் கேட்டு ரசித்துக்கொண்டு இருக்கும் உங்கள் வசீகரக் குரலில் ஒலித்த பாடல்களையெல்லாம் பட்டியல் போடுவதென்றால் இன்றைக்குள் முடியாது. 'ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து...' பாடலில், 'சொட்டுத் தேனைப் போல்...' என்று நீங்கள் பாடும்போது ஜிலீரென்று நிஜமாகவே ஒரு சொட்டுத் தேன் நாவில் விழுந்தது போன்ற உற்சாகம் ஏற்படுகிறது. 'இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே' என்று வெறும் உவமை நயமாக இருந்த பாரதியாரின் வரியை உண்மையாக்கியவர் நீங்கள்.
'காது கொடுத்துக் கேட்டேன், ஆஹா குவா குவா சத்தம்...' என்று பிறக்கப்போகிற குழந்தைக்கும் பாடியிருக்கிறீர்கள்; 'போனால் போகட்டும் போடா!' என்று போன உயிருக்காகவும் பாடியிருக்கிறீர்கள். ஜனனத்துக்கும் பாடியிருக்கிறீர்; மரணத்துக்கும் பாடியிருக்கிறீர். கல்யாணத்துக்கும் பாடியிருக்கிறீர்; காரியத்துக்கும் பாடியிருக்கிறீர். காதலுக்கும் பாடியிருக்கிறீர்; காதல் தோல்விக்கும் பாடியிருக்கிறீர்; காதல் துரோகத்துக்கும் பாடியிருக்கிறீர். நட்புக்கும் பாடியிருக்கிறீர்; பிரிவுக்கும் பாடியிருக்கிறீ. சந்தோஷத்துக்கும் பாடியிருக்கிறீர்; துக்கத்துக்கும் பாடியிருக்கிறீர். அம்மாவுக்கும் பாடியிருக்கிறீர்; மகளுக்கும் பாடியிருக்கிறீர். தந்தைக்கும் பாடியிருக்கிறீர்; தனயனுக்கும் பாடியிருக்கிறார். வீரத்துக்கும் பாடியிருக்கிறீர்; விவேகத்துக்கும் பாடியிருக்கிறீர். ஆத்திகத்துக்கும் பாடியிருக்கிறீர்; நாத்திகத்துக்கும் பாடியிருக்கிறீர். பெரியவரைப் பற்றியும் பாடியிருக்கிறீர்; பெரியாரைப் பற்றியும் பாடியிருக்கிறீர்.
 'உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்' என்ற உங்களின் மிடுக்கான குரல், சோர்ந்து கிடந்த எத்தனை எத்தனை உள்ளங்களை உசுப்பி எழுப்பிச் சுறுசுறுப்பாக இயங்க வைத்திருக்கிறது! ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா..’ என்று நீங்கள் பாடுவதைக் கேட்டால், சோம்பிக் கிடப்பவனும் உத்வேகத்துடன் எழுந்து பணி செய்யப் புறப்படுவானே!
எம்.ஜி.ஆருக்குப் பாடுகிறீர்களா, சிவாஜிக்குப் பாடுகிறீர்களா என்று மட்டும் அல்ல; அது எந்த வயது சிவாஜி, 60-களில் இருந்த சிவாஜியா, 70-களில் இருந்த சிவாஜியா, 80-களில் இருந்த சிவாஜியா என வித்தியாசப்படுத்திக் காட்டி, உங்களின் குரல் அந்தந்தக் கால கட்ட சிவாஜியைக் கண் முன் நிறுத்தியதே... உங்களைப் போன்ற இன்னொரு அபூர்வ பாடகரை, பிறவிப் பாடகரை நேற்றைக்கும் இன்றைக்கும் நாளைக்கும்கூட இந்த உலகம் காணப் போவது இல்லை.
எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருக்கு மட்டுமல்ல; ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், எஸ்.எஸ்.ஆர், சிவகுமார், நாகேஷ் இவர்களுக்கும்கூடத் தோதாக நீங்கள் உங்களின் குரலை மாற்றிப் பாடி, மாய வித்தை புரிந்திருக்கிறீர்கள். 'செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்' பாடலில், 'நாடகம் என்றே நான் நினைக்க, நடப்பதை உன்னிடம் ஏன் மறைக்க...', என்று நீங்கள் பாடும்போது, ஜெய்சங்கர்தான் என் கண் முன் தெரிகிறார். 'என் கேள்விக்கென்ன பதில்...' பாடலில், சிவகுமாருக்காக உங்கள் குரலை எத்தனை மென்மையாகக் குழைத்துக் கொடுத்தீர்கள். அதுவே பின்னாளில், 'பருத்தி எடுக்கையிலே...' பாடலில், 'ஓடித்தான் வந்திருப்பேன்...' என்று பாடும்போது, அது சிவகுமாருக்கு எவ்வளவு கச்சிதமாகப் பொருந்தியது! 'வாராதிருப்பாரோ வண்ண மலர்க் கன்னியவள்...' என்ற பாடலின் ஒவ்வொரு வரியுமே எஸ்.எஸ்.ஆரே பாடுகிற மாதிரியல்லவா இருந்தது! குறிப்பாக, 'கண்ணழகு பார்த்திருந்து... காலமெல்லாம் காத்திருந்து...' என்று அந்த வரிகளை நீங்கள் நீட்டிய அழகு எஸ்.எஸ்.ஆருக்கு அத்தனைக் கச்சிதம்! ‘அவளுக்கென்ன அழகிய முகம்...’ பாடலில், ‘சிற்றிடை என்பது... சிறுநகை என்பது...’ என்ற வரிகளில் நீங்கள் நாகேஷாகவே மாறிவிட்டீர்கள்.
மற்ற பாடகர்கள், பாடகிகள் பாடிய தனிப் பாடல்களையும் நான் ரசிப்பதுண்டுதான். ஆனால், அவை எத்தனை அற்புதமான பாடலாக இருந்தாலும், தொடர்ச்சியாக ஐந்து அல்லது ஆறு பாடல்களுக்கு மேல் என்னால் கேட்கமுடியவில்லை. இடையில் மாறுதலுக்கு வேறு ஒரு குரல் கேட்கவேண்டும் என்று தோன்றிவிடும். ஆனால், உங்களின் பாடல்களை எம்.பி-3 வடிவில் போட்டுத் தொடர்ந்து 180 பாடல்கள், 200 பாடல்கள் எனக் கேட்டாலும் எனக்கு அலுக்கவில்லை; சலிக்கவில்லை!
அதற்கு முக்கியக் காரணம், மற்றவர்கள் வெறுமனே அந்தப் பாடல் வரிகளைப் பாட்டாகப் பாடிவிட்டுப் போய்விடுகிறார்கள். ராகம், தாளத்துக்குச் சரியாகப் பாடுகிறோமா என்பதில் மட்டுமே அவர்களின் கவனம் இருக்கிறது. மாறாக நீங்களோ அந்தப் பாடல் வரிகளை உள்வாங்கிக்கொண்டு, அதற்கு வாயசைத்து நடிக்க இருப்பவர் யார் என்பதையும் தெரிந்துகொண்டு, அந்தக் கதாபாத்திரமாகவே மாறி, ராகத்தோடு உணர்ச்சியையும் இழைத்து, அந்தப் பாடலுக்கு உயிர் கொடுத்துவிடுகிறீர்கள். 'ஆகட்டும்டா தம்பி ராஜா...' பாடலில், 'பள்ளம் மேடு பார்த்துப் போகணும்...' என்று பாடும்போது பள்ளத்தையும் மேட்டையும் தன் குரலில் இறக்கி, ஏற்றிக் காட்டுகிறீர்களே! அதே போல, 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா...' பாடலில், 'அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி...' என்று பாடும்போது 'அண்ணா....ந்து' என்கிற உச்சரிப்பிலேயே அண்ணாந்து பார்க்கின்ற உணர்வைக் கொடுக்கிறீர்களே! 'வாழ நினைத்தால் வாழலாம்' பாடலில், 'கன்னி இளமை என்னை அணைத்தால்...' என்று பாடும்போது உண்மையாகவே ஒரு பெண் தன் மென்மையான கரங்களால் அணைப்பது போலிருக்குமே!.குரலில் இத்தனை மாய ஜாலங்களை உங்களைத் தவிர, வேறு எந்தப் பாடகரும் செய்து நான் கேட்டதில்லை ஐயா!
ஓர் அழகான பெண் பொம்மைக்குப் பளபளவென்று புடவை உடுத்தி, நகை அலங்காரம் செய்து வைத்தால் கூட, அது உயிரற்ற பொம்மைதான்! அப்படித்தான் மற்றவர்களின் குரல் எனக்குத் தோன்றுகிறது. ஆனால், உங்களின் குரலோ கன்னம் குழிய, பொக்கை வாய் திறந்து சிரித்தபடி கண்ணெதிரே தவழ்ந்து வரும் மெய்யான அழகுக் குழந்தை போன்றது. எடுத்துக் கொஞ்சத் தொடங்கினால், கீழே இறக்கிவிட மனசே வருவதில்லை.
ஒருவர் இறக்கும் தறுவாயில் சிவ நாமத்தையோ, ராம நாமத்தையோ, ஏதேனும் கடவுள் ஸ்லோகங்களையோ கேட்டபடி உயிர் துறந்தால், அவர் சொர்க்கத்தை அடைவார் என்பது ஆன்மிகவாதிகளின் நம்பிக்கை. நானும் கடவுள் நம்பிக்கை உள்ளவன்தான். ஆனால், எனது இறுதிக் காலத்தில் - அது பக்திப் பாடலோ, சினிமா பாடலோ... ‘அழகென்ற சொல்லுக்கு முருகா’வோ, ‘அடி என்னடி ராக்கம்மா’வோ... - எதுவானாலும், உங்களின் குரல் எனது காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கும்போதே என் இறுதி மூச்சு நிற்கவேண்டும் என்பதே என் ஆசை!
ஐயா... உங்கள் பாடல்களால் என்னைப் போன்ற லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான ரசிகர்கள் புத்துணர்ச்சி பெற்றோம்; கவலைகள் மறந்தோம்; சோகங்களை உதறினோம்; என் தாத்தா, என் அப்பா, நான், என் மகன் எனத் தலைமுறை தலைமுறையாக உங்களின் பொன்னான குரல் எங்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்து வருகிறது. ஆனால், இதற்கெல்லாம் கைம்மாறாக நாங்கள் உங்களுக்கு என்ன செய்திருக்கிறோம்! ஒன்றுமில்லை. ஆனால், எங்கள் இதயத்தில் ஒரு சிம்மாசனம் போட்டு, உங்களை அதில் கம்பீரமாக உட்கார வைத்து, மானசீகமாக அழகு பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அதைத் தவிர, எங்களால் செய்யக்கூடியது என்ன இருக்கிறது!
தாங்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் மனமகிழ்வோடும், உடல் நலத்தோடும் வாழ அருள்பாலிக்குமாறு அந்த முருகப் பெருமானையும், நான் வணங்கும் மகாஸ்ரீ அரவிந்த அன்னையையும் வணங்கி, வேண்டுகிறேன்.
மிக்க அன்புடன்,


ரவிபிரகாஷ்.


பின்குறிப்பு: 2008-ஆம் ஆண்டில், டி.எம்.எஸ். அவர்களின் பிறந்த நாளான மார்ச் 24-ம் தேதியன்று, திடுதிப்பென்று காலையில், “ரவி, இன்னிக்கு டி.எம்.எஸ். பிறந்த நாள். இப்போ அவரைப் பார்க்கத்தான் கிளம்பிண்டிருக்கேன். நீங்களும் ரொம்ப நாளா அவரைப் பார்க்கணும்னு சொல்லிண்டிருந்தீங்களே, வரீங்களா, போவோம்?” என்று கேட்டார் என் இனிய நண்பரும், ஆன்மிகப் பேச்சாளருமான திரு.பி.என்.பரசுராமன். முந்தின நாள் இரவு எனது வலைப்பூவில் ஏற்றுவதற்காக ரெடி செய்து வைத்திருந்த மேட்டரை அப்படியே கொஞ்சம் திருத்தி, டி.எம்.எஸ்ஸுக்கான பிரத்யேக கடிதமாக மாற்றி, அருகில் உள்ள ஒரு கடையில் பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டு அலுவலகம் போனேன். திரு.பி.என்.பி. காத்திருந்தார். ஆனால், உடனே அவரோடு கிளம்பிச் சென்று, என் கனவு நாயகனான டி.எம்.எஸ். அவர்களைப் பார்த்துப் பேசமுடியாதபடிக்கு அலுவலகத்தில் பணிகள் நெருக்கின.
ஆனால், ஆச்சரியம்..! பரசுராமன் கிளம்பிச் சென்ற இரண்டு மணி நேரத்தில் அவரிடமிருந்து போன். “நான் இப்போ டி.எம்.எஸ். வீட்டில்தான் இருக்கேன். உங்களைப் பத்திச் சொன்னேன். அவர் உங்களோடு உடனே பேசணும்கிறார்” என்று சொல்லி, போனை அவரிடம் கொடுத்தார். ஊர் உலகத்தையெல்லாம் மகிழவைத்த அந்த காந்தர்வக் குரல் பிரத்யேகமாக என் காதுகளுக்கு மட்டும் ஒலித்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேல் என்னுடன் பேசியிருப்பார் டி.எம்.எஸ். “வாங்கய்யா ஒரு நாள் நம்ம வீட்டுக்கு. நிதானமா பேசலாம்!” என்று அன்பு அழைப்பு விடுத்தார். அது என் வாழ்வில் மறக்க முடியாத இனிய அனுபவம்.
அதன்பின், சில நாட்கள் கழித்து, அவரை நேரில் சந்தித்துப் பேசும் பாக்கியம் கிடைத்தது. அவரோடு பேசிப் பழகிய இனிய தருணங்களை விதம்விதமாக புகைப்படங்கள் எடுத்துத் தள்ளிய இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் திரு.உசேனுக்கு என் மனமார்ந்த நன்றி! அந்த முதல் சந்திப்பில், டி.எம்.எஸ். அவர்களிடம் இந்தக் கடிதத்தைக் கொடுத்தேன். படித்துவிட்டு, மறுநாள் அவரே என்னை செல்போனில் அழைத்தார். ஒரு ரசிகனின் கடிதத்துக்கு மதிப்புக் கொடுத்து, நெஞ்சம் நெகிழ நன்றி சொல்லி, சுமார் ஒன்றரை மணி நேரம் பேசிய பாங்கு, எனக்கு அவர் மீதுள்ள அபிமானத்தையும் மதிப்பையும் பல மடங்கு கூட்டியது.